மீன் வியாபாரி கல்லால் அடித்து கொலை… மகன் செய்த வெறிச்செயல்..!


சிதம்பரம் அருகே உள்ள சி.வக்காரமாரி நடுத்தெருவை சேர்ந்தவர் பெருமாள்(வயது 62). மீன் வியாபாரி. இவருக்கு ஜெயலட்சுமி, அஞ்சம்மாள் ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி ஜெயலட்சுமி என்பவர் மூலம் ரமேஷ், சுதாகர் ஆகிய 2 மகன்களும், 2-வது மனைவி அஞ்சம்மாள் என்பவர் மூலம் செண்பகம்(27) என்ற மகளும், சுந்தரேசன்(26) என்ற மகனும் உள்ளனர்.

அதேபகுதியில் அஞ்சம்மாளுக்கு சொந்தமான இடத்தில் டீக்கடை உள்ளது. இது தற்போது முதல் மனைவி ஜெயலட்சுமியின் மகன் ரமேஷ் வசம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இடத்தை அஞ்சம்மாளும், ரமேசும் உரிமை கொண்டாடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெருமாள், 2-வது மனைவி அஞ்சம்மாள், மகன் சுந்தரேசன் ஆகியோர் டீக்கடைக்கு சென்று அங்கிருந்த பொருட் களை வெளியில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ரமேசுக்கும், பெருமாளுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு 9 மணியளவில் பெருமாள் அவரது 2-வது மனைவியின் வீட்டின் முன்பு அமர்ந்து அக்கம் பக்கத்தினரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ரமேஷ், பெருமாள் மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவர் கீழே விழுந்தார்.

ரமேசை பார்த்ததும் பயந்து எழுந்து ஓட முயன்றார். அப்போது ஆத்திரம் அடைந்த ரமேஷ் தந்தை என்றும் பாராமல் கீழே கிடந்த கல்லை எடுத்து பெருமாளின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் ரமேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய ரமேசை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!