நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து சர்ச்சை எழுப்பிய டிஜிபி – போனி கபூரின் ரியாக்சன்..!


ஸ்ரீதேவி மரணம் குறித்து ஓராண்டுக்குப் பிறகு இப்போது சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இதுபற்றி அவரது கணவர் போனி கபூர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி தன் உறவினர் திருமணத்தில் பங்கேற்பதற்காக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துபாய் சென்றிருந்தார். அங்கு பிப்ரவரி 14-ம் தேதி அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கி இறந்து கிடந்தார். அவரது மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. ஆனால், மதுபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து இறந்ததாக கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஸ்ரீதேவியின் மரணம் விபத்துதான் என துபாய் காவல்துறை உறுதி செய்தது.

இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல என்றும், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங் சமீபத்தில் கூறினார். தன் நண்பரும் தடயவியல் நிபுணருமான டாக்டர் உமாதாதன் இதனை தெரிவித்ததாக டிஜிபி குறிப்பிட்டிருந்தார். ஸ்ரீதேவி மரணம் அடைந்து ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், அவரது இறப்பு குறித்து கேரள டிஜிபி கூறியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் கூறும்போது, “இதுபோன்ற அடிப்படையற்ற கதைகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. இதுபோன்ற கதைகள் தொடர்ந்து வருவதால் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. இந்த கதைகள் எல்லாம் ஒருவரின் கற்பனை” என்றார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!