மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் கழுத்தறுத்து கொன்றேன் – டிரைவர் வாக்குமூலம்..!


மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் கழுத்தை அறுத்து கொன்றேன்’ என்று பெயிண்டர் கொலை வழக்கில் கைதான டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நத்தம் காமராஜ் நகரை சேர்ந்தவர் பிரபு (வயது 32). பெயிண்டர். நேற்று முன்தினம் இவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சரக்கு வாகன டிரைவர் சண்முகம் (32) என்பவர், பிரபுவை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைதான சண்முகம் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், எனது மனைவி அருணாதேவிக்கும், பிரபுவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இது தொடர்பாக பலமுறை அவர்களை நான் கண்டித்தேன். இருப்பினும் 2 பேரும் கேட்கவில்லை. எனது மனைவியுடனான தொடர்பை பிரபு துண்டிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நான், பிரபுவை கழுத்தை அறுத்து கொன்றேன் என்று கூறியுள்ளார்.

இந்தநிலையில் நத்தம் அரசு மருத்துவமனையில் பிரபுவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவருடைய உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர்.

மேலும் இந்த கொலையில் வேறு சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி மருத்துவமனை முன்பாக திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர்் மறியலில் ஈடுபட்ட பிரபுவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியலை கைவிட்டு பிரபுவின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக நத்தம்-திண்டுக்கல் சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!