பா.ம.க. மகளிர் அணி தலைவி படுகொலை – அரக்கோணம் அருகே பயங்கரம்..!


அரக்கோணம் அடுத்த கைனூர் ராமசாமி நகரை சேர்ந்தவர் நிர்மலா (வயது 42). அரக்கோணம் நகர பா.ம.க. மகளிர் அணி தலைவியான இவர் அரக்கோணம் தாசில்தார் தெருவில் டெய்லர் கடை நடத்தி வந்தார். இவரது கணவர் இறந்து விட்டார். தாய் படவேட்டம்மாளுடன் வசித்து வந்தார்.

நிர்மலா தனது தாய் படவேட்டம்மாளுடன் வீட்டில் படுத்து தூங்கினார். விடிந்து நீண்ட நேரமாகியும் வீட்டிலிருந்து இருவரும் வெளியே வரவில்லை. அக்கம் பக்கம் வசிப்பவர்கள் சந்தேகமடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

அப்போது நிர்மலா தலையில் படுகாயத்தோடு படுக்கையில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். அவரது அருகில் படவேட்டம்மாள் காயத்துடன் மயங்கி கிடந்தார்.

இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

நிர்மலா வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது நிர்மலாவின் செல்போன் மற்றும் மொபட் காணாமல் போனது தெரியவந்தது. தடயவியல் துறையினர் கைரேகைகளை பதிவு செய்தனர்.

கொலை சம்பவம் இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணிக்குள் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலை நடந்த இடத்தில் அம்மிக்கல் ரத்த கறையோடு கிடந்தது. இது தொடர்பாக 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!