இந்திய விமானப்படை – ஒப்பரேசன் பவானுக்கு பயன்படுத்திய எம்.ஐ-8 உலங்குவானூர்திகள் நீக்கம்…!


சிறிலங்காவில் ‘ஒப்பரேசன் பவான்’ நடவடிக்கைக்காக இந்தியப் படையினர் பயன்படுத்திய ரஷ்ய தயாரிப்பான எம்.ஐ.-8 உலங்குவானூர்திகள் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

1972ஆம் ஆண்டு தொடக்கம், கடந்த 45 ஆண்டுகளாக உலங்குவானூர்திகளை இந்திய விமானப்படை பயன்படுத்தி வந்தது. இந்த உலங்குவானூர்திகள் நேற்று பிற்பகல் பெங்களூரு ஜலகங்கா விமானப்படைத் தளத்தில் நடந்த நிகழ்வுடன் சேவையில் இருந்து நீக்கப்பட்டன.

இந்திய விமானப்படை 1972ஆம் ஆண்டு தொடக்கம் 107 உலங்குவானூர்திகளைப் பயன்படுத்தி வந்தது. சிறிலங்காவில் இந்திய அமைதிப்படையின் நடவடிக்கைகளின் போதும், கார்கில் போரின் போதும் இந்த உலங்குவானூர்திகள் முக்கிய பங்காற்றின.


இந்திய- சிறிலங்கா உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கு முன்னதாக, 1987ஆம் ஆண்டு, ஜூலை மாதம், சுதுமலையில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் எம்.ஐ-8 உலங்குவானூர்தி, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சென்னைக்கு அழைத்துச் சென்றிருந்தது.

ஆம் ஆண்டு, ‘ஒப்பரேசன் பவான்’ நடவடிக்கையின் ஒரு கட்டமாக, யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மைதானத்தில் எம்.ஐ-8 உலங்குவானூர்திகள் மூலம் தரையிறக்கப்பட்ட பரா கொமாண்டோக்களின் அணியொன்று விடுதலைப் புலிகளால் முற்றாக அழிக்கப்பட்டது.

அந்த அணியைச் சேர்ந்த கோர்க்கா சிங் என்ற இந்தியப் படைச் சிப்பாய் மாத்திரமே உயிர் தப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உலங்குவானூர்திகள் இந்திய விமானப்படையினால் முக்கிய- மிக முக்கிய பிரமுகர்களின் பயணங்களுக்கும் பயன்படுத்தப்பட்டது. – Source: puthinappalakai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!