பரோட்டோ சாப்பிட்டபடி மனைவியுடன் போனில் பேசிய புதுமாப்பிளைக்கு நடந்த பரிதாபம்!


புதுச்சேரி லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பாரதி நகர் 8-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 35). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி சண்முக சுந்தரி. திருநெல்வேலியை சேர்ந்தவர். சில மாதங்களுக்கு முன்பு தான் இவர் களுக்கு திருமணமானது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முகசுந்தரி தனது தாய் வீட்டிற்கு சென்று வி்ட்டார். இதனால் புருஷோத்தமன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு புருஷோத்தமன் ஓட்டலில் இருந்து புரோட்டா வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் தனது மனைவியிடம் செல்போனில் பேசியபடியே அதை சாப்பிட்டார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது தொண்டையில் புரோட்டா சிக்கியது. இதனால் தொடர்ந்து பேச முடியாமல் புருஷோத்தமனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே எதிர்முனையில் பேசிய அவரது மனைவி செல்போன் இணைப்பை துண்டித்து விட்டு மீண்டும் அழைத்தார். ஆனால் புருஷோத்தமனால் செல்போனை எடுத்து பேச முடியவில்லை.

இதனால் ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்று சுதாரித்த சண்முகசுந்தரி இது தொடர்பாக முத்தியால்பேட்டையில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் உடனடியாக புருஷோத்தமனின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீடு உள்புறமாக பூட்டி கிடந்ததை பார்த்ததும் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு புருஷோத்தமன் மயங்கி கிடந்தார். அவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், புருஷோத்தமன் செல்போனில் பேசிய படியே சாப்பிட்டதால் புரோட்டா தொண்டையில் சிக்கி மூச்சு திணறி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!