தந்தையின் கண்முன்னே நடந்த விபத்தில் பிளஸ்-1 மாணவி தலைநசுங்கி பலி..!


புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள ஒதியம்பட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் திவ்யா (வயது 16), ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் முதலியார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் டியூசன் சென்டரிலும் படித்து வந்தார்.

நேற்று இரவு 8.30 மணியளவில் டியூசன் முடித்த பின்னர் ராமச்சந்திரன் தனது மகளை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அப்போது கடலூர் சாலையில் பிராமீனாள் வீதி அருகே சென்றபோது சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற தனியார் பஸ் எதிர்பாராத விதமாக ராமச்சந்திரன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் திவ்யா நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரது மீது தனியார் பஸ்சின் முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதமாக இறந்தார். ராமச்சந்திரன் தனது கண் முன்னே மகள் இறந்ததை கண்டு அலறி துடித்தார். இதனை பார்த்த உடன் பஸ் டிரைவர், பஸ்சை நிறுத்திவிட்டு, தப்பி ஓட முயற்சி செய்தார்.

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தனியார் பஸ் டிரைவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை சரமாரியாக தாக்கினர். ஆத்திரத்தில் சிலர் விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ்சையும் அடித்து நொறுக்கினர். அப்போது அந்த பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு இறங்கி, நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இது பற்றிய தகவல் அறிந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!