வாயில் துணியை திணித்து மனைவி கழுத்தை நெரித்துக் கொலை… கணவர் தப்பியோட்டம்..!


மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா கிரேகவாலு கிராமத்தை சேர்ந்தவர் சவுமியா (வயது 25). அதுபோல் கிரேகவாலு அருகே கல்குனி கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி (30). இவருக்கும் சவுமியாவுக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

இதற்கிடையே சவுமியாவின் நடத்தையில் குமாரசாமிக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் குமாரசாமி தனது மனைவி சவுமியாவுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நாளுக்குநாள் குமாரசாமிக்கு மனைவியின் நடத்தையிலான சந்தேகம் மென்மேலும் அதிகரித்துள்ளது. இதனால் தினமும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மனம் உடைந்த சவுமியா கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபித்துக்கொண்டு தனது பிள்ளைகளுடன் கிரேகவாலு கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குமாரசாமி தனது மனைவி சவுமியாவை சமாதானப்படுத்தி அழைத்துவர மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தூங்க சென்றுவிட்டனர்.

அப்போதும் சவுமியா, குமாரசாமி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த குமாரசாமி, தனது மனைவியின் வாயில் துணியை திணித்து, கழுத்தை நெரித்துக்கொலை செய்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டார்.

நேற்று காலையில் தான் சவுமியா கொலை செய்யப்பட்டதும், அவரை அவரது கணவரே கொலை செய்துவிட்டு தப்பியதும் தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிரேகவாலு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சவுமியாவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் குமாரசாமி அவரை கழுத்தை நெரித்துக்கொலை செய்தது தெரியவந்தது.

இதைதொடர்ந்து கொலையான சவுமியாவின் உடலை மீட்டு மலவள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக கிரேகவாலு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் தலைமறைவான குமாரசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!