விளையாட்டாகப் பழகினேன்.. இப்படி ஆகும்னு தெரியல -மாணவியை கர்ப்பிணியாக்கிய இளைஞன் பகீர்


அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு படிக்கும் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளது கண்டு, ஆசிரியர்களும், பெற்றோரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுதொடர்பான வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த உமா (பெயர் மாற்றம்) அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவருகிறார். எட்டாம் வகுப்பு வரை அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வெற்றி பெற்று, இப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்து ஒரு நாள்தான் பள்ளிக்கூடத்துக்கு வந்திருக்கிறார். அன்றே கடுமையான வயிற்று வலியால் துடிக்க பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். உமாவை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்தபோது, மாணவி ஐந்து மாத கர்ப்பிணி என்பதை அறிந்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

14 வயதான உமாவின் இந்தப் பரிதாப நிலைக்கு யார் காரணம் என்று கேள்விக்கணைகளால் துளைத்தனர். நீண்ட அழுகைக்குப்பின் உமாவின் உறவினரும் கூலித் தொழிலாளியான அதே கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் ராஜு (20) என்பவரை சுட்டிக்காட்டியிருக்கிறார். இதைத்தொடர்ந்து ராஜு மீது உமாவின் பெற்றோர் பொறையாறு காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தனர். உடனடியாக ராஜு விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார்.

போலீஸ் விசாரணையில், “விளையாட்டாகப் பழகினேன். இப்படி ஆகும்னு தெரியலை” என்று கூறியிருக்கிறார் ராஜு. இதற்கிடையில் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள உமாவை நேரில் விசாரிக்க சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா சென்றுள்ளார். உமாவிடம் வாக்குமூலம் பெற்ற பிறகு ராஜு போக்ஸோ சட்டத்தின்படி சிறையில் அடைக்கப்படுவார் என காவல்துறையினர் கூறுகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!