தனிக்குடித்தனம் போன மகன் – சினிமா மேக்-அப் மேன் தூக்குப்போட்டு தற்கொலை..!


திண்டுக்கல்லில் மகன் தனிக்குடித்தனம் செல்வதை தாங்கிக்கொள்ள முடியாத போடியை சேர்ந்த சினிமா மேக்கப் மேன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

போடியை சேர்ந்த சினிமா மேக்கப் மேன் திண்டுக்கல்லில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல் திருச்சி சாலையில் ஒரு மேம்பாலம் உள்லது. இந்த பாலத்தில் இன்று காலை ஒரு ஆண்பிணம் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதாக திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அங்கு பாலத்தின் மேல் பகுதியில் சட்டையில் தூக்கு போட்டு இறந்த நிலையில் ஒருவர் தொங்கிக்கொண்டிருந்தார்.

இதையடுத்து உடலை மீட்பதற்காக தீயணைப்பு படையினருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் பாலத்தில் ஏறி உடலை மீட்டனர். அவரது சட்டைப்பையில் இருந்து ஒரு செல்போனை போலீசார் எடுத்தனர்.

அதை வைத்து விசாரணை நடத்தியதில் பிணமாக தூக்கில் தொங்கியவர் தேனி மாவட்டம் போடி ரெங்கநாதபுரத்தை சேர்ந்த கணேசன்(வயது52) என்றும், திரைப்பட துறையில் நடிகர், நடிகைகளுக்கு மேக்-அப் மேனாக பணியாற்றியவர் என்றும் தெரியவந்தது.

கணேசனுக்கு விஜய் என ஒரு மகன் உள்ளார். அவரும் சினிமாதுறையில் பணியாற்றி வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு விஜய்க்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் தனிக்குடித்தனம் செல்லுமாறும் பெண் வீட்டார் கூறியதாக தெரிகிறது.

அதன்படி விஜயும் தன்னை தனிக்குடித்தனம் செல்லப்போவதாக தந்தையிடம் கூறி வந்தார். இது கணேசனுக்கு மன வேதனையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அவர் நேற்று மகன், மருமகளை சென்னைக்கு அனுப்பிவைத்தார். பின்பு அவர் திண்டுக்கல்லுக்கு வந்தார். திண்டுக்கல் திருச்சி சாலையில் உள்ள மேம்பாலத்தில் அவர் தனது சட்டையை கழற்றி அதில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்த கணேசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் திண்டுக்கல், போடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!