லண்டனில் தங்கி கடற்படை பிரிவில் பட்டப்படிப்பு படித்து வந்த அஜய் ராணா மீதான கற்பழிப்பு வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்டதால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தங்கி இருந்து கடற்படை பிரிவில் பட்டப்படிப்பு படித்து வந்தவர் அஜய் ராணா (வயது 35). இந்தியர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ந் தேதி அதிகாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு ‘லிப்ட்’ கொடுப்பதாக கூறி, அவரை காரில் ஏற்றி சென்றார்.
சிறிது தூரம் சென்ற பிறகு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்திய அஜய் ராணா, காரில் வைத்து, அந்த பெண்ணை கற்பழித்தார். இதையடுத்து அவரிடம் இருந்து தப்பித்த அந்த பெண் அருகில் இருந்த போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார். அதன் பேரில், அஜய் ராணாவை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் தனது தாய்க்கு உடல் நிலை சரியில்லை என கூறி, டிசம்பர் 12-ந் தேதி லண்டனில் இருந்து இந்தியா வந்துவிட்டார்.
இதையடுத்து, லண்டனில் அஜய் ராணா தங்கியிருந்த அறையில் இருந்து எடுக்கப்பட்ட அவரது ‘ஹெட்போன்’ மூலம் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டதில், அவர் அந்த பெண்ணை கற்பழித்தது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த ஆண்டு ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற அஜய் ராணாவை அக்டோபர் மாதம் 22-ந் தேதி அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.
அதன் பின்னர் நவம்பர் மாதம் அவர் இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்பட்டார். இதையடுத்து அஜய் ராணா மீதான கற்பழிப்பு வழக்கு விசாரணை லண்டன் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.-Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!