நட்சத்திர ஓட்டலில் திருமணம் செய்து கொள்ளும்படி நடிகைக்கு துப்பாக்கி முனையில் மிரட்டல்..!


பிரபல போஜ்புரி நடிகை ரிது சிங். தற்போது ‘துவாரி பிடியா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சோன்பத்ரா மாவட்டத்தில் நடக்கிறது. இதற்காக படக்குழுவினர் ராபர்ட்ஸ்கன்ச் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் ஓட்டலுக்கு வந்த இளைஞர் ஒருவர் ரிது சிங் அறைக்குள் நுழைந்து துப்பாக்கியை காட்டி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மிரட்டினார். இதனால் பயந்துபோன ரிது சிங் அலறினார். அவரது சத்தம் கேட்டு அசோக் என்ற இளைஞர் அந்த அறைக்குள் ஓடினார். அவரை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார்.


இதில் அசோக் கையில் குண்டு பாய்ந்து கீழே விழுந்தார். துப்பாக்கி சத்தம் கேட்டு ஓட்டல் ஊழியர்கள் நடிகையின் அறைக்குள் ஓடிச்சென்றனர். அவர்களையும் துப்பாக்கியால் மிரட்டினார். இதனால் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அறையை விட்டு வெளியே வருமாறு இளைஞரை எச்சரித்தனர்.

ஆனால் அவர் போலீசாரை நோக்கியும் சுட்டார். ஆனாலும் போலீசார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஒன்றரை மணிநேரத்துக்கு பிறகு துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் ஜான்பூரை சேர்ந்த பங்கஜ் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் ரிது சிங் அதிர்ச்சியில் இருக்கிறார். படப்பிடிப்பை ரத்து செய்து படக்குழுவினர் சொந்த ஊருக்கு திரும்பினர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!