தமிழகம்-கேரளாவில் பாஜக வெற்றி பெறாதது திராவிடம் இன்னும் உயிர்ப்போடு இருப்பதை காட்டுகிறது-கனிமொழி

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி, பா.ஜனதா சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் ஆகிய முக்கிய தலைவர்கள் போட்டியிட்டதால் இந்த தொகுதி தமிழகத்தில் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நேற்று எண்ணப்பட்டன. கனிமொழி 5,63,143 ஓட்டுகள் வாங்கினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் 2,15,934 ஓட்டுகளை பெற்றார். இவரைவிட 3,47,209 வாக்குகள் அதிகம் பெற்று கனிமொழி வெற்றி பெற்றார்.

இந்நிலையில் வெற்றி பெற்ற பின் திமுக வேட்பாளர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வாக்களித்த மக்களுக்கு நன்றி. தூத்துக்குடி மக்களுக்கான குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன். தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜக வெற்றி பெறாதது, திராவிடம் இன்னும் உயிர்ப்போடு இருப்பதை காட்டுகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இந்த வெற்றி திமுகவிற்கும், திமுகவின் கொள்கைகளுக்கும் கிடைத்த வெற்றி.

இவ்வாறு அவர் கூறினார்.- Source: dailythanthi


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.