பா.ஜனதாவில் இணைந்து விட்டாரா கீர்த்தி சுரேஷ்..? தாயார் மேனகா அதிரடி..!


கீர்த்தி சுரேஷ் பா.ஜனதாவில் சேர்ந்துவிட்டதாக எழுந்த சர்ச்சையையடுத்து அவரது தாயார் மேனகா சுரேஷ் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா. தமிழில் ரஜினியுடன் ‘நெற்றிக்கண்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர். கீர்த்தி சுரேசின் தந்தை சுரேஷ் மலையாள சினிமா தயாரிப்பாளர். கீர்த்தி சுரேஷின் பாட்டியும் நடித்து வருகிறார். இந்நிலையில் மேனகா சுரேஷ் டெல்லியில் பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு வந்தது பரபரப்பாகி இருக்கிறது.

இதுகுறித்து மேனகா சுரேஷ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

‘என் கணவர் சுரேஷ் பா.ஜனதா கட்சியில் இருக்கிறார். ஆனால் நான் இப்போதுவரை எந்த கட்சியிலும் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. கீர்த்தியும் இந்த வி‌ஷயத்தில் என்னை மாதிரிதான்.

கணவர் சார்ந்திருக்கிற கட்சி என்ற முறையில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய டெல்லி சென்று இருந்தேன். பிரசாரம் முடிந்த உடன் சினிமா பிரபலங்கள் சிலர் பிரதமர் மோடியைச் சந்திக்க இருக்கிறார்கள். நீங்களும் கலந்துகொள்ள வேண்டும்’ என்று கேட்டார்கள்.


சுரேஷ் கோபி, கவிதா என்று எனக்கு அறிமுகமான சிலர் இருந்ததால் நானும் கலந்துகொண்டேன். பா.ஜனதா அலுவலகத்திலேயே அந்த சந்திப்பு நடந்தது. குரூப் போட்டோ எடுத்துக் கொண்டோம். அந்த செய்திதான் நடிகை மேனகாவும் பா.ஜனதா கட்சியில் சேர்ந்துவிட்டார்’ என்ற அர்த்தத்தில் வெளியாகி இருக்கிறது.

கொஞ்சம் ஓவராக போய் ‘கீர்த்தியும் பா.ஜனதாவுல சேர்ந்துட்டாங்களாமே’ என்றுகூட விசாரித்திருக்கிறார்கள். ஒரு வி‌ஷயத்தை தெளிவாக சொல்லிவிடுகிறேன். எனக்கோ என் மகளுக்கோ அரசியல்ல ஈடுபடணும் என்ற எண்ணம் எல்லாம் இப்போதுவரை இல்லை’.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!