ஒடிசாவில் பானி புயல் நாளை கரையை கடக்கிறது – மக்களுக்கு எச்சரிக்கை..!


வங்கக் கடலில் உருவாகி, அதிதீவிர புயலாக உருமாறியுள்ள பானி புயல், ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தின் தெற்கு கடலோரப் பகுதியில் நாளை கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிதீவிர புயலாக மாறியுள்ள பானி புயல், புரி மாவட்டத்தின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலி பகுதிகளுக்கு இடையேயான கடலோரப்பகுதியில், நாளை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மணிக்கு 175 முதல் 185 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

புரியில் கரையைக் கடந்தவுடன் ஜகத்சிங்பூர், கட்டாக், குர்தா, ஜாஜ்பூர், பத்ரக், பாலசோர், மயூர்பாஞ்ச் ஆகிய பகுதிகள் வழியாகச் சென்று மேற்கு வங்காளத்துக்குள் பானி புயல் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பானி புயல் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், புரி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்ல வேண்டாம் என்று ஒடிசா அரசு அறிவுறுத்தியுள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று முதல் ஒடிசா அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதேபோல், பானி புயல் காரணமாக, ஒடிசாவின் 11 கடலோர மாவட்டங்களில் தேர்தல் நடத்தை நெறிமுறைகளைத் தேர்தல் ஆணையம் தளர்த்தியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு கருதி, 43-க்கும் மேற்பட்ட ரெயில்களை தென்கிழக்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது. மேற்கு வங்காளத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய குழுவினருடன் ரெயில்வே அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். அவர்கள் கூறும் தகவலின் அடிப்படையில், ரத்து செய்யப்பட்ட ரெயில்கள் மீண்டும் இயக்கப்படும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!