புகைப்படத்திற்காக படகில் போஸ் கொடுத்தபோது.. ஆற்றில் விழுந்த கேரள ஜோடி.. வைரல் வீடியோ


கேரளாவைச் சேர்ந்த இளம் ஜோடி, திருமணத்திற்கு முந்தைய புகைப்பட ஆல்பத்துக்காக போஸ் கொடுத்தபடி படகில் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஆற்றுக்குள் தவறி விழுந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

திருமணத்துக்கு தயாராகி வரும் ஒவ்வொரு ஜோடிக்குமே தங்களது திருமண ஆல்பம் சிறப்பாக வர வேண்டும். எல்லோரையும் கவர வேண்டும். ரசிக்கும் வகையில் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள்.

அப்படித்தான் கேரளாவைச் சேர்ந்த டிஜின் மற்றும் சில்பா ஜோடி ஆசைப்பட்டு உள்ளது. இவர்களுக்கு வரும் மே 6ம் தேதி திருமணம் நடைபெறுவதாக நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

டிஜின் ஷில்பா ஜோடி, தனியார் புகைப்பட நிறுவனத்திடம் தங்களது ஆசையை சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சிறப்பாக செஞ்சுடுவோம் என கூறி கேரளாவின் பம்பா நதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.

அங்கு இருவரையும் ஒரு படகில் உட்கார வைத்து போஸ் கொடுக்க வைத்தனர். மற்றொரு படகில் கேமராமேன் புகைப்படம் எடுத்தார். அப்போது வாழை இலையை தலைமேல் பிடித்துக்கொண்டு ஜோடிகள் இருவரும் கண்களால் காதல் செய்யும்படி கேமராமேன் கட்டளையிட்டார்,

அப்போது கூட இருந்தவர்கள் மழை துளி அவர்கள் விழும் வண்ணம் தண்ணீரை அவர்கள் மீது தெளித்தனர். இந்த காட்சிகள் படமாகிக்கொண்டிருந்த அந்த வேளையில் காதல் செய்த ஜோடிகள் இருவரும் தண்ணீருக்குள் தவறிவிழுந்தனர். அவர்கள் விழும் போது ஒவ்வொரு பிரேமையும் ஒளிப்பதிவாளர் புகைப்படம் எடுத்திருக்கிறார்.

இந்நிலையில் தவறி விழுந்த ஜோடிக்கு பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஏனெனில் அவர்கள் தவறிவிழுந்த இடத்தில் தண்ணீரின் ஆழம் குறைவாக இருந்தது. இதனால் தப்பினார்கள். அதேநேரம் வீடியோ மற்றும் புகைப்படம் நேச்சுரலாக வர வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே கீழே தள்ளப்பட்டனரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.-Source: webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!