ரெயில் முன் பாய்ந்து மாணவி தற்கொலை- பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் விபரீத முடிவு..!


கடலூர் முதுநகர் அடுத்த கோதண்டராமபுரம் அருகே உள்ள கரைமேடு பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மகள் காவ்யா (வயது 17). இவர் கடலூர் முதுநகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியிருந்த அவர், அதன் முடிவுக்காக காத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது. இதில் அனைத்து பாடங்களிலும் காவ்யா தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால் அவர், 600-க்கு 244 மதிப்பெண்களே எடுத்திருந்தார். இதனால் காவ்யா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். வீட்டில் தனியாக இருந்த அவர், அழுதுகொண்டே வெளியேறினார்.

கடலூர்-சிதம்பரம் ரெயில்வே தண்டவாளத்தின் அருகில் அமர்ந்து, ரெயிலுக்காக காத்திருந்தார். அப்போது கடலூர் மார்க்கத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த ரெயில் முன் காவ்யா பாய்ந்தார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

ரெயில் முன்பாய்ந்து காவ்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி அறிந்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓடிவந்து, உடலை பார்த்து கதறி அழுதனர்.

இது பற்றி அறிந்ததும் கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!