சென்னையில் இளைஞர் தற்கொலை… போலீஸாரிடம் சிக்கியது முக்கிய ஆவணம்…!


சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் அருண்குமார்(36). தனியார் நிறுவன ஊழியர். 4 வங்கிகளின் கிரெடிட் கார்டுகள் மூலம் நிறைய கடன் வாங்கியுள்ளார்.

அந்தப் பணத்தில் சொகுசாக வாழ்க்கை நடத்தியுள்ளார். இந்தநிலையில் அவரால் கடனைத் திரும்பச் செலுத்த முடியவில்லை. இதனால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.

வாங்கியக் கடனைத் திரும்பச் செலுத்தாததால் வங்கி ஊழியர்கள் கடனை வசூலிக்க அவருக்குக் கடும் நெருக்கடி தந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சிலமாதங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்த அருண்குமார் திங்கள்கிழமை இரவில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அக்கம்பக்கத்தினர் தந்த தகவல் அடிப்படையில் அவரது வீட்டுக்குச் சென்ற போலீஸார் செவ்வாய்க்கிழமை காலையில் அருண்குமாரின் உடலைக் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறப்பதற்கு முன்பு தான் வாங்கிய கடன் விவரங்களையும் அது தொடர்பாக வங்கி ஊழியர்களிடம் நடத்திய பரிவர்த்தனை விவரங்களையும் அருண்குமார் கடிதமாக எழுதிவைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தைக் கைப்பற்றியுள்ள போலீஸார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். – Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!