கோடை காலத்தில் சருமம் மினுமினுக்க செய்யும் பப்பாளி பேஸ் பேக்..!


பப்பாளி சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து, முகத்தை பொலிவாக வைக்க உதவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பப்பாளி ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி சருமத்தை மெருகேற்றுங்கள்.

சருமம் மினுமினுக்க செய்யும் பப்பாளி பேஸ் பேக்
தற்போதைய சுற்றுச்சூழல் மாசு மற்றும் வெப்பநிலை மாற்றம் காரணமாக சருமம் மிக சீக்கிரமே பொலிவிழந்து விடுகிறது. சருமம் அதன் மென்மை தன்மையையும், ஈரப்பதத்தையும், அழகையும் இழந்து போவதை யாரும் விரும்ப மாட்டார்கள். உங்கள் சருமம் வறட்சியாகவோ அல்லது அதிகபடியான எண்ணெய் தன்மையுடனோ இருக்கலாம். கவலை வேண்டாம்.

உங்களுக்காகவே இயற்கை கொடுத்த வரப்பிரசாதம் தான் பப்பாளி. பப்பாளியில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது. மேலும் இதில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால், சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து, முகத்தை பொலிவாக வைக்க உதவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பப்பாளி ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி சருமத்தை மெருகேற்றுங்கள்.

பப்பாளி மற்றும் தேன்:

வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பப்பாளி மற்றும் தேன் சிறந்த தீர்வு. தேன் சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படும். பப்பாளியின் விழுது முகத்தில் உள்ள துளைகளில் ஆழமாக சென்று சுத்தம் செய்கிறது.

பப்பாளியின் விழுது – ¼ கப்
தேன் – ½ தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – ½ தேக்கரண்டி

இவை மூன்றையும் நன்கு கலந்து முகத்தில் தடவவும். 10 நிமிடங்களில் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்தில் நான்கு நாட்கள் செய்து வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.

பப்பாளி மற்றும் ஆரஞ்சு:

பப்பாளி மற்றும் ஆரஞ்சு இரண்டையும் கலந்து பயன்படுத்துவதால் அதிகபடியான எண்ணெய் சுரப்பது குறைந்துவிடும். மேலும் முகத்தில் உள்ள கருமையை போக்க வல்லது.


பப்பாளி விழுது – தேவையான அளவு
ஆரஞ்சு சாறு – 3 தேக்கரண்டி

ஒரு பௌலில் பப்பாளி விழுது தேவையான அளவு எடுத்து கொண்டு, அதில் 3 தேக்கரண்டி ஆரஞ்சு சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வரவும். இதனால் முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்கும்.

பப்பாளி, வாழைப்பழம் மற்றும் வெள்ளரி:

உங்கள் சருமத்தை பிரகாசமாக்க வாழைப்பழம், வெள்ளரி மற்றும் பப்பாளி ஆகிய மூன்றையும் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம். சருமத்தை ஈரப்பதத்துடனும் மென்மையாகவும் வைக்க உதவும். பப்பாளி, வெள்ளரி மற்றும் வாழைப்பழம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து கொள்ளவும். இதனை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவி விடவும். இது சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படுகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!