குழந்தைகளை கடத்தி கொன்று புதைத்த கும்பல் -பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி பார்த்ததால் பரபரப்பு


மும்பை தகிசரை சேர்ந்த 2 வயது சிறுவன் அகமது ஜமால். கடந்த ஞாயிற்றுக்கிழமை இவனது தாய் அருகில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றிருந்த நேரத்தில் சிறுவன் திடீரென காணாமல் போனான். தண்ணீர் பிடித்து விட்டு வீட்டுக்கு வந்த அவனது தாய் மகனை காணாமல் தேடி அலைந்தார்.

எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் போனதை அடுத்து அவர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினார்கள்.

விசாரணையில், சிறுவனின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஆப்ரின் கான் (வயது20) என்ற இளம்பெண் தனது தாய் முனிபா ஷாவுடன் (40) சேர்ந்து சிறுவனை கடத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் தாய், மகள் இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடத்தப்பட்ட சிறுவன் அகமது ஜமாலை தானே மும்ராவை சேர்ந்த ஆசிம் இப்ராகிம்(49) என்பவரது வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக கூறினர்.

உடனே போலீசார் மும்ரா சென்று ஆசிம் இப்ராகிமின் வீட்டில் இருந்த சிறுவன் அகமது ஜமாலை மீட்டனர். பின்னர் அவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். இதையடுத்து போலீசார் ஆசிம் இப்ராகிமையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி அமிராவையும் (46) கைது செய்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் இதற்கு முன்பு 8 குழந்தைகளை கடத்தியது தெரியவந்தது. மேலும் அதில் சில குழந்தைகளை பணத்திற்காக விற்று விட்டதாகவும், சில குழந்தைகளை கொன்று மும்ரா பகுதியில் புதைத்து விட்டதாகவும் தெரிவித்தனர். இதை கேட்டு போலீசாரே கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் போலீசார் அவர்கள் குழந்தைகளை கொன்று புதைத்ததாக கூறப்பட்ட இடத்திற்கு சென்றனர். அப்போது தங்களுடன் ஆப்ரின் கானையும் அழைத்து சென்றனர். மேலும் அந்த இடத்தில் போலீசார் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி பார்த்தனர். ஆனால் குழந்தைகளின் உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் அங்கு திரண்டு விட்டனர். இதனால் பெரும் பரபரப்பு உண்டானது.

தொடர்ந்து அங்கு போலீசார் பொக்லைன் எந்திரம் மூலம் குழந்தைகளின் உடல்கள் ஏதும் சிக்குகிறதா என தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் குழந்தைகளை கொன்று புதைத்து உள்ளதாக கூறியதால், அவர்கள் குழந்தைகளின் உடல் உறுப்புகளை விற்கும் கும்பலை சேர்ந்தவர்களா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!