கசோகி வாரிசுகளுக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளை வழங்கிய சவுதி பேரரசு..!


எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடான சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் ஜமால் கசோகி. 59 வயதான இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்தார். அவர் தனது கட்டுரைகளில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் குறித்தும், அந்நாட்டின் மன்னராட்சி முறை பற்றியும் கடுமையாக விமர்சித்து எழுதி வந்தார்.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் 2ந்தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்திற்கு சென்றபொழுது அவர் கொல்லப்பட்டார். இதற்கு சவுதி அரேபிய இளவரசர் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனை சவுதி அரேபிய அரசு மறுத்து வந்தது.

கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் என துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டினார். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்த பிறகு சவுதி அரேபிய அரசு ஒப்பு கொண்டது. எனினும் அதை சண்டையில் ஏற்பட்ட மரணம் என்று மட்டுமே தெரிவித்தது. பின்னர்தான் சவுதியிலிருந்து அனுப்பப்பட்ட குழு அவரை கொன்றது என தெரியவந்தது. இச்சம்பவம் சவுதி அரேபியாவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்டது மிகப்பெரிய தவறுதான். அதே நேரம் இதில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை என சவுதி அரேபியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரியாத் நகரில் இருந்து அனுப்பப்பட்ட 15 ஏஜெண்டுகள் கொண்ட குழு ஒன்று அவரை கொன்று தூதரகத்தில் வைத்து பல துண்டுகளாக்கின. அவரது உடல் இதுவரை கண்டறியப்படவில்லை.

கசோகிக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் என 4 வாரிசுகள் உள்ளனர். அவர்களுக்கு சவுதி அரேபிய பேரரசு நீண்டகால அடிப்படையில் சொத்துகள் மற்றும் வசதிகளை செய்து கொடுத்துள்ளது.

இதுபற்றி வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சவுதியின் ஜெட்டா நகரில் அமைந்துள்ள வீடுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன.

இவற்றின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.27 கோடியே 67 லட்சம் ஆகும். கசோகியின் மூத்த மகனான சலா, பேரரசில் தொடர்ந்து வசிக்க திட்டமிட்டுள்ளார். மற்றவர்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அவர்கள் இந்த வீடுகளை விற்க கூடும் என செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சொத்துகள் தவிர்த்து அவர்கள் ஒவ்வொருவரும் மாதம் ஒன்றுக்கு 7 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையும் மற்றும் கோடிக்கணக்கான மதிப்புள்ள தொகையும் பெற கூடும் என தகவல் தெரிவிக்கின்றது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!