பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி ரூ.1 லட்சம் பறிப்பு- போலி ஐபிஎஸ் அதிகாரி

டெல்லியின் கிராரி பகுதியைச் சேர்ந்தவன் ராஜ்குமார் (30). இவன் அதேப்பகுதியில் ஒரு ஷோரூமில் பணிப்புரியும் பெண்ணை, 2 மாதங்களுக்கு முன்னர் ஜிம் ஒன்றில் சந்தித்துள்ளான். அப்போது, தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என கூறியுள்ளான். பின்னர் இருவரும் நண்பர்களாகியுள்ளனர்.

நாளடைவில் ராஜ்குமார் அந்த பெண்ணை விரும்புவதாகவும், தனக்கு புற்றுநோய் உள்ளதால் திருமணம் செய்ய இயலாது எனவும் கூறியுள்ளான். இறப்பதற்கு முன் அப்பெண்ணை ஒரு அரசாங்க அதிகாரியாக பார்த்திட வேண்டும் என கூறியுள்ளான். இதற்கு ரூ.1 லட்சம் செலவாகும் என கூறவே, அதை நம்பி அப்பெண்ணும் பணத்தைக் கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்றுக் கொண்ட பின்னர் ராஜ்குமாரிடம் இருந்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த பெண் தான் ஏமாற்றப்படுவதை அறிந்தார். பின்னர் அவரது சமூக வலைத்தளங்களில் தொடர்பு கொள்ள முயற்சித்தும், தொடர்ந்து மறுத்து வந்துள்ளான்.

அதன் பின்னர் ஒரு நாள் திடீரென அப்பெண் பணிப்புரியும் ஷோரூமிற்கு வந்து, அவனை சந்திக்குமாறு கேட்டுள்ளான். அப்பெண் மறுக்கவே, அங்கிருந்த செக்யூரிட்டி அவனை போக சொல்லியுள்ளார். கடும் வாக்குவாதத்தினையடுத்து, நான் ஐபிஎஸ் அதிகாரி, இந்த ஷோரூமை மூடி விடுவேன் என மிரட்டி வந்துள்ளான்.

இதையடுத்து கடந்த வெள்ளி அன்று அப்பெண், ராஜ்குமார் தன்னை ஏமாற்றிவிட்டு, மிரட்டுவதாக புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில், ராஜ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டதாக துணை கமிஷனர் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து ராஜ்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், ‘நான் ஒரு வாகன ஓட்டுனர். ஐபிஎஸ் அதிகாரி அல்ல. முன்னதாக ஜிம்மில் பணியாற்றி வந்தேன்’ என ராஜ்குமார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.