பாய் பிரண்ட் கோபி கைது.. புதிய பிரச்சினையில் சிக்கும் ‘பிக் பாஸ்’ ஐஸ்வர்யா..?


பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தாவின் ஆண் நண்பர் கோபி கிருஷ்ணா பற்றிய பின்னணி தெரியவந்துள்ளது.

தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் படம் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா தத்தா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்ட போது, அவரது ஆண் நண்பரின் பெயர் கோபி கிருஷ்ணா என்பது தெரியவந்தது.

இந்த கோபி கிருஷ்ணாவை பண மோசடி வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரு தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கோபி கிருஷ்ணா, பெரிய கோடீஸ்வரராக மாறியது எப்படி என்பது குறித்து பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க கோபி கிருஷ்ணன் தேர்ந்தெடுத்த தொழில் கால்சென்டர். சென்னையில் சுமார் 10 இடங்களில் கால்சென்டர்களை நிறுவினார். ஏராளமான இளைஞர்களை பணிக்கு அமர்த்தினார். அவர்களது வேலை ஒன்றே ஒன்று தான். டேடாபேசில் உள்ள போன் நம்பரை அழைத்து, லோன் வேண்டுமா என கேட்பது.

பணத் தேவையில் இருக்கும் மக்கள், இவர்களின் மாய வலையில் விழுந்துவிடுவர். லோன் வாங்கி தருவதற்காக, சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலிலேயே வசூலித்து விடுவர். இந்த சர்வீஸ் சார்ஜ், லோன் தொகையை பொறுத்து மாறுபடும். அந்த தொகையை வாங்கிக்கொண்டு, கடைசியில் ஏதாவது சாக்கு போக்கு கூறி லோன் இல்லை எனக் கூறிவிடுவர். இதனால் சம்மந்தப்பட்ட நபர் விரக்தியில் எதுவும் செய்யாமல் விட்டுவிடுவார்.


ஏழை, நடுத்தர மக்களின் இந்த பலவீனமான மனநிலையை பயன்படுத்தி தான் கோபி கிருஷ்ணா, குறுகிய காலத்தில் கோடீஸ்வரராகி இருக்கிறார். இந்த பணத்தை வைத்து சினிமா தயாரிக்க முடிவு செய்த போது தான், அவருக்கு ஐஸ்வர்யா தத்தாவுடன் நட்பு ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் ஒன்றாக சேர்ந்து வெளிநாடுகளுக்கு சென்று, அங்கு நடக்கும் நட்சத்திர கலைவிழாக்களில் கலந்துகொண்டனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா கலந்துகொண்டதன் பின்னணியிலும் கோபி கிருஷ்ணாவின் உதவி இருந்திருக்கிறது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது கூட, ஐஸ்வர்யா தத்தா கோபியுடன் தான் தொலைபேசியில் பேசினார். அந்த அளவிற்கு இருவருக்குமான நட்பு இருக்கிறது. அப்போது பாதிக்கப்பட்ட சிலர், கோபியின் மோசடியில் ஐஸ்வர்யாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியது நினைவுக்கூரத் தக்கது.

ஆனால் கோபி கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ள இந்த சூழலில், அவர் குறித்து வாய் திறக்காமல் மௌனம் சாதிக்கிறார் ஐஸ்வர்யா தத்தா. அவர் மௌனம் கலைக்கும் பட்சத்தில், மேலும் பல உண்மைகள் வெளிவே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை போலீசார், ஐஸ்வர்யா தத்தாவிடமும் விசாரிக்கக் கூடும் என தெரிகிறது.

தமிழில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் அறிமுகமான போதும், பிக் பாஸ் நிகழ்ச்சி தான் ஐஸ்வர்யாவை பிரபலமாக்கியது. தற்போது அவர் புதிய சில தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் அவரது நண்பர் கைது செய்யப்பட்டிருப்பதால், அவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.-Source: filmibeat

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!