மூளை புற்றுநோய் பற்றி இந்திய மாணவியின் அரிய கண்டுபிடிப்பு…!


‘கிளியோபிளாஸ்டோமா’ எனப்படும் மூளை புற்றுநோய்க்கான சிகிச்சையில் உதவும் தனது கண்டுபிடிப்புக்காகத்தான் காவ்யா, 2019-ம் ஆண்டு தேசிய ‘ஸ்டெம்’ கல்வி விருதைப் பெற்றுள்ளார். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

விர்ஜினியா மாநிலம் ஹெர்ன்டானில் வசிக்கும் காவ்யாவை ஸ்டெம் கல்வி அமைப்பு, ‘அபார புத்திசாலித்தனமும் சாதிக்கும் திறனும் கொண்ட நபர்’ எனப் பாராட்டி உள்ளது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் உயிரியல் பயின்று வருகிறார் காவ்யா. இந்த இளம் விஞ்ஞானி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட கிளியோவிஷன் என்ற மருத்துவ சோதனை முறையை உருவாக்கியிருக்கிறார்.

இம்முறையானது, மூளையில் ஏற்படும் புற்றுக்கட்டிகளை கண்டறிய வழக்கமான மருத்துவ சோதனை முறைகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவான நேரத்தையே எடுத்துக்கொள்ளும், மிகத் துரிதமாக முடிவைக் கூறி விடும்.

இந்தச் சோதனை முறைக்கு டி.என்.ஏ. மாதிரி தேவையில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட பகுதியை திசு ஆய்வு செய்ததன் ஸ்கேன் படம் போதும்.

மூளைப் புற்றுநோய்க்கான சிகிச்சையில் காவ்யாவின் கண்டுபிடிப்பு ஒரு முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

‘கேர்ள்ஸ் கம்ப்யூட்டிங் லீக்’ என்ற சேவை நோக்கிலான நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் காவ்யா உள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!