பெற்ற தந்தையின் தலையில் கல்லை போட்டு துடிதுடிக்க கொன்ற வங்கி ஊழியர்..!


திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு தந்தையை கொன்ற வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் உள்ள பகவதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது50). அவரது மனைவி மகாலட்சுமி (46). அதே பகுதியில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வந்தனர்.

இவர்களுக்கு வினோத்குமார் (26) என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர். வினோத்குமார் எம்.பி.ஏ. முடித்து விட்டு கோவிலூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். அபிராமி ஆசிரியர் பயிற்சி முடித்து நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

வினோத்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வினோத்குமாருக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. நேற்று இரவு போதையில் வீட்டிற்கு வந்த அவர் தந்தையின் தலையில் அம்மி கல்லைபோட்டு கொலை செய்தார். இதை பார்த்ததும் அருகில் இருந்த அவரது தாய் மகாலட்சுமி சத்தம்போட்டார்.

இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த வினோத்குமார் தனது தாயை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவர்களது சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இது குறித்து குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வேடசந்தூர் டி.எஸ்.பி. சிவக்குமார் தலைமையில் அங்கு வந்த போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மகாலட்சுமியை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் செல்வராஜ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வராஜுக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் நபருக்கும் அடிக்கடி தகராறு இருந்து உள்ளது. நேற்று இரவு போதையில் வந்த வினோத்குமார் அவர்களிடம் எதற்காக எங்களது வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்கிறீர்கள் என சத்தம் போட்டார். இதனால் அவர்களுக்கு கடும் வாக்கு ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த மகாலட்சுமி தனது மகனை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவர் அங்கு வராமல் கத்தியால் தாய் என்று கூட பாராமல் சரமாரியாக குத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் தடுக்க வந்தார். அவரை கீழே தள்ளி அருகில் கிடந்த அம்மிக்கல்லை செல்வராஜ் தலையில் வினோத்குமார் போட்டார். இதில் அவர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளார். மேற்கண்டவை விசாரணையில் தெரியவந்து உள்ளது. அதன்பின்னர் வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!