இதயநோயுள்ள பெண்கள் கர்ப்பம் தரிப்பதில் இவ்வளவு ஆபத்து இருக்கா..?


இதய நோயுள்ள பெண்களை ரெண்டு விதமாப் பிரிக்கலாம். சிலர் பிறக்கற போதே இதய நோய்களோட பிறக்கறவங்க ஒரு வகை. அதுக்குப் பிறகு வர்ற இதய நோய்களால பாதிக்கப்படறவங்க அடுத்தது. சாதாரணமா பெண்களுக்கு 5.5 லிட்டர் ரத்தம் இருக்கும். கர்ப்ப காலத்துல இது 30 சதவிகிதம் அதிகமாகும். கர்ப்பத்தோட 10-12வது வாரங்களில் இது அதிகமாகத் தொடங்கும்.

இதயம் பம்ப் பண்ற வேகமும் இதயத்துடிப்பும் அதிகமாகும். ரத்தக்குழாய்கள் விரிவடையும். இதயம் ஆரோக்கியமா இருக்கிற பெண்களுக்கு இதெல்லாம் பிரச்சனையைக் கொடுக்காது. ஆனா, பிரச்சனை உள்ளவங்களோட இதயத்தால ஈடுகொடுக்க முடியாது. இதயக் கோளாறுகளை அலட்சியப்படுத்திட்டு, கர்ப்பம் தரிச்சா, முதல் 10-12 வாரங்களிலேயே கரு கலையலாம்.


இதயம் இன்னும் பழுதடையலாம். ரத்தம் உறைஞ்சு, மூளைக்கும் நுரையீரலுக்கும் போகும் ரத்தக்குழாய்களில் அடைப்பு உண்டாகி, பக்கவாதம் வரலாம். சில வேளைகளில் மரணமும் நிகழலாம். சில வகை பிறவி இதயக் குறைபாடுகள் உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருக்கிறதுதான் பாதுகாப்பு. இதய வால்வுகளில் சுருக்கம் இருந்தாலோ, இதயத்தைச் சுத்தின நான்கு சுவர்களில் பிரச்சனை இருந்தாலோ கூட கர்ப்பம் தரிக்கிறது ரிஸ்க்.

வால்வு சம்பந்தப்பட்ட கோளாறுகள், அடைப்புகளுக்கு சில அறுவை சிகிச்சைகள் செய்த பிறகு, அந்தப் பெண் கர்ப்பம் தரிக்கலாம். சில பெண்களுக்கு இதய வால்வு மாற்று சிகிச்சை’ செய்யப்பட்டிருக்கும். அவங்களுக்கு வால்வுகளுக்குப் போகும் ரத்தம் உறையாமலிருக்க தினசரி மருந்துகள் கொடுக்க வேண்டியிருக்கும். அந்த மருந்துகளை எடுத்துக்கிறப்ப, அவங்க கர்ப்பம் தரிக்கிறது சிரமம்.

சில சிறப்பு கேஸ்களில், அவங்களுக்கு பிரத்யேக மருந்துகளைக் கொடுத்த பிறகுதான் கர்ப்பம் தரிக்க அறிவுறுத்துவோம். சிகிச்சை மற்றும் ஆபரேஷன் முடிஞ்ச பிறகு அந்தப் பெண் கர்ப்பம் தரிச்சாலும், கர்ப்ப காலம் முழுக்க, ஒரு இதயநோய் நிபுணரோட கண்காணிப்புல இருக்கிறது பாதுகாப்பானது. அட்வான்ஸ்டு வசதிகள் உள்ள மருத்துவமனையில் பிரசவ காலத்தைச் செலவழிக்கிறது அந்தப் பெண்ணுக்குப் பாதுகாப்பு.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!