பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர்.
வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றன. நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிரவ் மோடி லண்டனில் இருப்பது உறுதியாகியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பிரபல செய்தி நிறுவனமான டெய்லி டெலிகிராப் வெளியிட்டுள்ள வீடியோவில் நிரவ் மோடியின் சொகுசு வாழ்க்கை அம்பலமாகியுள்ளது.
நிரவ் மோடி 8 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.62.5 கோடி) மதிப்பிலான சொகுசு பங்களாவில் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது. இந்த பங்களாவின் மாத வாடகை 17,000 யூரோ (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.13 லட்சம்) என கூறப்படுகிறது.
லண்டனில் ஆக்ஸ்போர்ட் தெரு அருகே உள்ள சொகுசு பங்களாவில் நிரவ் மோடி வசித்து வருவதாகவும், சோகோவில் புதிய வைர வியாபாரம் ஒன்றை துவக்கி உள்ளதாகவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிரவ் மோடி, சர்வ சாதாரணமாக தனது சிறிய நாயை கூட்டிக் கொண்டு, சொகுசு பங்களாவில் இருந்து அருகில் இருக்கும் தனது அலுவலகத்திற்கு சென்று வருகிறார்.
நீங்கள் லண்டனில் அடைக்கலம் புகுந்து உள்ளீர்களா? என செய்தி நிருபர் கேள்வி எழுப்புகிறார். ஆனால் அவற்றுக்கு பதில் சொல்ல நிரவ் மோடி மறுக்கிறார்.-Source: dailythanthi
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!