அஜித் இன்னமும் நடிக்கிறாரா?’ – ரசிகர்களைக் கடுப்பேற்றிய விஜய்பட நடிகை..!


`நடிகர் அஜித் இன்னும் சினிமாவில் நடிக்கிறாரா என தெரியவில்லை’ என நடிகை இஷா கோபிகர் கேள்வி எழுப்பியிருப்பது அஜித் ரசிகர்களிடடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை இஷா கோபிகர். இவர் தமிழில் நரசிம்மா படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்திருப்பார். பத்தாண்டுகளுக்கு மேலாக கோலிவுட்டிலிருந்து விலகிருந்தவர், தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கத் தயாராகியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். `இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் இப்படத்தில் நடிக்கிறார். ஏலியன்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவரும் இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்த நிலையில், அண்மையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு இவர் அளித்த பேட்டியில் அஜித் குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

அந்தப் பேட்டியில், `சிவகார்த்திகேயனைப் பார்க்கும்போது எனக்கு ரஜினிதான் நினைவுக்கு வருகிறார். அவருடைய மேனரிசத்தை வைத்து நான் கூறவில்லை. ரஜினியைப்போல் அவர் நடிக்க விரும்புகிறார் என்ற அர்த்ததிலும் சொல்லவில்லை. ஆனால், ஏதோ ஒன்று ரஜினியின் பிம்பமாய் அவரைக் காட்சிப்படுத்துகிறது.

அவருடைய முடி, முகம், கண்கள், இதில் எதுவோ ஒன்று” என்று சிவகார்த்திகேயனைப் பாராட்டி பேசியிருந்தார். அவருடைய இந்தப் பேட்டியை ரஜினி ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

நடிகர் அஜித்தைப்பற்றி பேசுகையில்,`எனக்கு அஜித்தைப் பிடிக்கும். ஆனால் அவர் இன்னும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறாரா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை” என்றார். அவரின் இந்தப் பேட்டி குறித்து அஜித் ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

`சிவகார்த்திகேயனை ரஜினியுடன் ஒப்பிட்டுப் பேசியது ரஜினி ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது” என்று சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!