புல்வாமா தாக்குதலின் பின் உல்லாச படகு சவாரியில் இருந்த மோடி – காங்கிரஸ் புதிய சர்ச்சை..!


காஷ்மீரில் புலவாமா மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி, துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்தனர்.

இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டது, நாடு முழுவதும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடி என்ன செய்து கொண்டிருந்தார் என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காஷ்மீரில் புலவாமா தாக்குதல் நடைபெற்றபோது நேரம் பிற்பகல் 3.10 மணி. இதையொட்டி காங்கிரஸ் கட்சி 5.15 மணிக்கு தனது கருத்தை தெரிவித்தது. இதுபற்றி பிரதமருக்கும் தெரியும்.

தன்னை தேசியவாதி என்று கூறிக்கொள்கிற பிரதமர், டிஸ்கவரி சேனலில் சுய விளம்பரம் செய்துகொள்வதற்காக ராம்நகர் கார்பெட் தேசிய பூங்காவில் ஆவண படப்பிடிப்பில் தொடர்ந்து இருந்தார்.


படப்பிடிப்புக்கு வந்த கேமரா குழுவினருடன் அவர் உல்லாசமாக படகு சவாரியை தொடர்ந்து இருக்கிறார். அங்கு பாரதீய ஜனதா கட்சியினர் தனக்கு ஆதரவாக கோஷங்கள் போடுகின்றனரா என்பதை உறுதி செய்திருக்கிறார்.

ஒவ்வொரு இந்திய குடும்பமும் உணவு பெற்றிராதபோது, மாலை 7 மணிக்கு பிரதமர் பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் டீயும், சமோசாவும் சாப்பிட்டுள்ளார்.

ஒரு பக்கம், தாக்குதலில் பலியான வீரர்களின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு கொண்டிருந்தன. இன்னொரு பக்கம் பிரதமர் தனது கொள்கை பிரசார விளம்பர படப்பிடிப்பில் இருந்தார். இத்தகைய நடத்தையை நாட்டின் பிரதமரிடம் இருந்து எதிர்பார்க்க முடியுமா?

படப்பிடிப்பில் இருந்ததற்கு பதிலாக, உடனடியாக பிரதமர் ராணுவ துறைக்கான மத்திய மந்திரிசபை கூட்டத்தை கூட்டி, நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!