மகனை இழந்த சோகம்.. கைவிட்டு சென்ற மருமகள்.. வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை..!


திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வெள்ளியங்காட்டுப்புதூரை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 62). ஓய்வுபெற்ற கிராம உதவியாளர். இவருடைய மனைவி நாகவள்ளி (55). இவர்களுடைய மகன் சந்துரு (35). இவருக்கு தருண் (10) என்ற மகன் உள்ளார்.

தருண் காங்கேயத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் சந்துரு இறந்து விட்டார். இதனால் சந்துருவின் மனைவி தன்னுடைய மகன் தருணை, மாமனார், மாமியார் பராமரிப்பில் விட்டுவிட்டு சென்று விட்டார். இதனால் தருண் தாத்தா, பாட்டி பராமரிப்பில் இருந்து வருகிறான்.

இந்த நிலையில் தங்க முத்துவிற்கு நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லாமல் போனதால் காங்கேயத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது அங்குள்ள டாக்டர் திருப்பூர் சென்று மேல்சிகிச்சை பெறுமாறு தங்கமுத்துவிடம் கூறியுள்ளார். இதனால் மருத்துவமனையில் இருந்து தங்கமுத்துவும், அவருடைய மனைவியும் வீட்டிற்கு வந்து மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்றுகாலை 5.45 மணியளவில் தங்கமுத்துவின் ஓட்டு வீட்டில் இருந்து திடீரென்று புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் அவருடைய வீடு தீப்பற்றி எரிந்தது. அதேசமயம் பேரன் தருண் தீக்காயத்துடன் அலறியடித்து கொண்டு வீட்டின் கதவை திறந்து வெளியே வந்துள்ளான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து முற்றிலும் அணைத்தனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு தங்கமுத்துவும், அவரது மனைவியும் கட்டிலில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

பின்னர் தீக்காயத்துடன் உயிர் தப்பிய தருணை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு தொடர்ந்து அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஹேமலதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் தங்கமுத்துவின் மகன் ஏற்கனவே இறந்து விட்டதால், தங்கமுத்துவும் நோய் பாதிப்பினால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் மருமகளும் வீட்டை விட்டு சென்ற நிலையில், தங்களையும், தங்களது பேரனையும் கவனிக்க யாரும் இல்லாததால் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கணவன், மனைவி இருவரும் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டனர். இதில் கணவனும், மனைவியும் உடல் கருகி பலியாகிவிட்டனர். பேரன் மட்டும் தீக்காயத்துடன் உயிர் தப்பியுள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!