நள்ளிரவில் கல்லூரி மாணவரின் தள்ளுவண்டிக் கடையை உடைத்த போலீஸார்! – அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்

சென்னை அருகே கல்லூரி ஒன்றில் படித்துக்கொண்டு சுயதொழில் செய்யும் மாணவரின் தள்ளுவண்டிக் கடையை நள்ளிரவில் போலீஸார் உடைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் அப்துல் ரகுமான். இவர் காலை கல்லூரி படிப்பை முடித்த பிறகு, மாலை நேரத்தில் பெரியமேடு பகுதியில் தள்ளுவண்டிக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்தத் தள்ளுவண்டி கடையால் வரும் வருமானத்தை தனது கல்லூரி படிப்பு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், இவரது கடையை 8-ம் தேதி மர்ம நபர்கள் சிலர் உடைத்துவிட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, போலீஸார் மாணவன் நடத்தி வந்த கடையை உடைத்திருப்பது தெரியவந்தது. இந்தக் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் காட்சியில், நள்ளிரவில் அப்பகுதிக்கு வரும் போலீஸார் அங்கிருந்த தள்ளுவண்டிக் கடையின் ஒருபகுதியைப் பிடித்து இழுத்து உடைக்கின்றனர்.

கல் ஒன்றை எடுத்து வண்டியின் மீது போட்டு உடைக்க முயல்கிறார். பிழைப்புக்காக தள்ளுவண்டியில் நடத்தி வரும் மாணவனின் கடையை போலீஸாரே உடைக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என மாணவன் அப்துல் ரகுமான் கோரிக்கை விடுத்துள்ளார். – Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.