டெல்லி தீ விபத்து: திருப்பூரைச் சேர்ந்த 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தார்கள்..!

திருப்பூர் மாவட்டம் பிச்சம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பனியாற்றிய ஊழியர்கள் அரவிந்த் சுகுமாரன் மற்றும் நந்தகுமார். அரவிந்த சுகுமாரன் அம்மாபாளையம் பகுதியிலும், நந்தகுமார் பி.என் ரோடு பகுதியிலும் வசித்து வந்தார்கள்.

இவ்விருவரும் டெல்லியில் நடைபெற்ற ஏற்றுமதியாளர்கள் கூட்டத்துக்காக கடந்த திங்களன்று விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர். அங்கு நடைபெற்ற ஏற்றுமதியாளர் சந்திப்புக் கூட்டத்தை முடித்துக்கொண்டு, நேற்றைய தினம் இரவு இருவரும் கரோல் பாஹ் பகுதியில் அமைந்திருக்கும் தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை அந்த விடுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், அங்கு தங்கியிருந்த 17 வாடிக்கையாளர்கள் உயிரிழந்துபோனார்கள்.

அதில் திருப்பூரைச் சேர்ந்த அரவிந்த் சுகுமாரனும், நந்தகுமாரும் அடக்கம். இவ்விருவரும் உயிரிழந்த தகவல் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவர்களது உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, இருவரின் உடல்களும் திருப்பூருக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.- Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.