கழுத்தில் பாம்பு ஒன்றை சுருக்குபோல போட்டு கைதியை டார்ச்சர் செய்த போலீஸ் – அதிர்ச்சி வீடியோ!


இந்தோனேஷியாவில் பப்புவா மாகாணத்தைச்சேர்ந்த ஒருவரை, மொபைல் போனைத் திருடியதாகச் சந்தேகப்பட்டு இந்தோனேசிய போலீஸார் கைது செய்தனர். அவனிடமிருந்து உண்மையை வரவழைப்பதற்காக, அவனது கைகள் இரண்டையும் பின்புறமாகக்கட்டி, அவனது கழுத்தில் பாம்பு ஒன்றை சுருக்குபோல போட்டு பயமுறுத்தியபடி விசாரித்துள்ளனர்.

விசாரணைக் கைதி ஒருவரிடம் இந்தோனேசிய போலீஸார் நடத்திய கொடூரமான விசாரணை, சமூக வலைதளங்களில் பலத்த கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இந்தோனேசியாவில் பப்புவா மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை, மொபைல் போனைத் திருடியதாகச் சந்தேகப்பட்டு இந்தோனேசிய போலீஸார் கைது செய்தனர்.

அவனிடமிருந்து உண்மையை வரவழைப்பதற்காக, அவனது கைகள் இரண்டையும் பின்புறமாகக் கட்டி, அவனது கழுத்தில் பாம்பு ஒன்றை சுருக்குபோல போட்டு பயமுறுத்தியபடி விசாரித்துள்ளனர். இந்த விசாரணைக்காட்சியை வீடியோவாகப் பதிவுசெய்து இணையத்தில் ஏற்ற, அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பலத்த கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றரை நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோக் காட்சியில், விசாரணைக்கைதியின் கழுத்தில் சுமார் எட்டடி நீளமுள்ள மிகப்பெரிய பாம்பு ஒன்றை மாலைபோலச் சுற்றிப் போட்டுள்ளார்கள். அந்தப் பாம்பைக்கண்டு பயத்தில் கைதி அலறுகிறான். கைகள் கட்டப்பட்டுள்ளதால் அவனால் வேறொன்றும் செய்ய இயலவில்லை.

ஒரு காவல்துறை அதிகாரி அந்தக் கைதியின் அருகில் வருகிறார். அந்தப் பாம்பின் வாலைப்பிடித்து கைதியின் வாயில் விட, கைதி கண்களை மூடிக்கொண்டு பீதியில் அலறுகிறார். அதோடு நிறுத்தாமல், அந்தப் பாம்பின் கழுத்துப் பகுதியைப் பிடித்து அதன் தலையால் கைதியின் முகத்தில் கொத்தவிட்டபடி விசாரணை நடத்துகிறார்கள்.

அப்போது கைதி அலறுவது கேட்டு அங்குள்ள மற்ற போலீஸ் அதிகாரிகளும் மொத்தமாகச் சிரிக்கிறார்கள். அடுத்ததாக அந்தப் பாம்பை கைதியின் காலைக் கடிக்கவிடுவதுபோல தரையில் நெளியவிட்டு அவனை அலறவிடுகிறார்கள். மேலும், அவனது ஜீன்ஸ் பேன்டினுள் பாம்பை நுழையவிட்டும் பயமுறுத்துகிறார்கள்.

இந்த விசாரணையின்போதே அவனிடம், “எத்தனை முறை மொபைல் போன்களைத் திருடியிருக்கிறாய்?’’ என்று காவல்துறை அதிகாரி விசாரிக்கிறார். அதற்கு அவன், “இரண்டு முறை திருடியிருக்கிறேன்’’ என்று பதில் தருகிறான். இப்படிச் சந்தேகத்தின்பேரில் பிடித்து வந்து விசாரிப்பதில் இத்தனை கொடூரத்தன்மையுடன் செயல்பட்டிருப்பதும் அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டிருப்பதும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பாம்பைக் கொத்தவிட்டு விசாரிக்கும் இந்த வீடியோ உடனடியாக உலக அளவில் பலராலும் பகிரப்பட்டு வைரலானது. பகிர்ந்த அனைவருமே இந்த விசாரணை முறை அப்பட்டமான மனித உரிமை மீறலாக இருப்பதாகத் தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்தனர். இன வெறியுடன் இந்தத் தண்டனை அளிக்கப்பட்டிருப்பதாகவும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் இதற்கு எதிர்ப்புக் கிளம்பியதால் இந்தோனேசிய காவல்துறை இந்த விசாரணை முறைக்கு தனது வருத்தத்தைத் தெரிவித்தது. மேலும், இந்த விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள்மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது. இந்தோனேசியாவில் கைதிகளைப் பாம்பால் கொத்தவிட்டு கொடூரமான முறையில் விசாரணை நடத்துவது முதல்முறை அல்ல என்றும், ஏற்கெனவே பப்புவா மற்றும் மேற்கு பப்புவா பகுதிகளைச் சேர்ந்த கைதிகளை இதேபோன்று விசாரித்துள்ளார்கள் என்றும் தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில், மேற்கு பாப்புவா தேசியக் குழுவின் உறுப்பினர் ஒருவரைக் கைது செய்தபோது, அவரையும் தனியறையில் அடைத்து பாம்பால் கொத்தவிட்டிருப்பதாக இந்தோனேசிய காவல்துறைமீது குற்றம்சாட்டியுள்ளனர்.

ஜெயவிஜயா மாவட்டத்தில் நடைபெற்ற சிறிய திருட்டுச்சம்பவத்துக்காக இத்தகைய கொடுமையான தண்டனை கொடுக்கப்பட்டிருப்பதை காவல்துறையினர் தெரிவித்தனர். எனினும், அந்த அதிகாரிகளைக் காக்கும் நோக்கில், “அந்தப் பாம்பு விஷத்தன்மையற்றது என்றும், கைது செய்யப்பட்ட திருடனை அந்தப் பாம்பு கொத்தவில்லை’’ என்றும் குறிப்பிட்டனர். மேலும், “இதுபோன்ற மனிதத்தன்மையற்ற முறையிலான விசாரணையை நாங்கள் ஊக்கப்படுத்துவதில்லை என்றும், இனி இதுபோன்ற முறையில் விசாரணைகள் நடத்தப்படமாட்டாது என உறுதியளிக்கிறோம்’’ என்றும் கூறினார்கள்.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!