கொலையாளிகளை நெருங்க முடியாத போலீஸ் – மதமாற்றத்தை தடுத்த ராமலிங்கம் கொலை!


கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். கேட்டரிங் நிறுவன உரிமையாளரான இவர் அருகே உள்ள கிராமத்திற்கு கடந்த 5ந் தேதி தனது நிறுவனத்திற்கு பணியாட்களை வேலைக்கு அமர்த்த சென்று இருந்தார். அப்போது அங்கு மதப்பிரச்சாரம் செய்தவர்களுடன் ராமலிங்கத்திற்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்துக்களை மதம் மாற்றுவது ஏன் என்று கேட்டு ராமலிங்கம் அவர்களுடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார். மேலும் அவர்கள் அணிந்திருந்த குல்லாவை பறித்து ராமலிங்கம் அணிந்தார். அதோடு மட்டும் அல்லாமல் விபூதியை எடுத்து வந்து அந்த மூன்று பேருக்கும் பூசிவிட்டார். இதனால் ஏற்பட்ட தகராறை அங்கிருந்தவர்கள் விலக்கி விட்டனர்.

இந்த நிலையில் வாக்குவாதம் நடைபெற்ற தினத்தன்று இரவு ராமலிங்கத்தை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். காலையில் மதமாற்ற முயற்சியை தடுத்து நிறுத்திய காரணத்தினால் தான் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது.

ராமலிங்கம் மதமாற்றம் தொடர்பாக மூன்று பேருடன் பேசிய வீடியோ வாட்ஸ் ஆப்பில் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. கொலை கடந்த 5ந் தேதி இரவு நடைபெற்றது. ஆனால் போலீசாரால் 7ந் தேதி காலை வரை யாரையும் கைது செய்ய முடியவில்லை. மதப்பிரச்சாரத்திற்கு வந்து ராமலிங்கத்துடன் வாக்குவாதம் செய்தவர்களை அழைத்து போலீசார் விசாரித்தனர்.

ஆனால் அவர்களுக்கும் கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரியவந்தது. இதனை அடுத்து மதப்பிரச்சாரத்திற்கு வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தான் கொலையாளிகளுக்கும் அடைக்கலம் கொடுத்ததாக கூறி 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தற்போது வரை கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை. அதாவது கொலையாளிகள் யார் என்றே போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர்களை போலீசாரால் நெருங்க முடியவில்லை.

கொலையாளிகளை கைது செய்யவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா எச்சரித்துள்ளார்.இதனால் கும்பகோணம் திருபுவனம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!