பிரதமர் மோடி ரெயில் நிலையத்தில் நிற்கும் ஓவியம் ஏலத்தில் எவ்வளவு தொகைக்கு விற்பனையானது தெரியுமா..?

பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வழங்கிய பரிசு பொருட்கள் ஏலம் விடப்படுகிறது. இதுகுறித்து மத்திய கலாச்சார துறை அமைச்சர் மகேஷ் சர்மா பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட பரிசு பொருட்கள் டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் ஞாயிறு, திங்கள்கிழமை ஏலம் விடப்படுகிறது. ஓவியங்கள், சிற்பங்கள், இசைக் கருவிகள், சால்வைகள் என சுமார் 1,900 பொருட்கள் ஏலத்தில் விடப்படும். இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை கங்கை நதி தூய்மை திட்டத்துக்கு வழங்கப்படும் என்றார்.

நாட்டின் பல்வேறு தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட ஓவியங்கள், சிற்பங்கள், சால்வைகள், தலைப்பாகைகள், நினைவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களும் ஏலம் விடப்படுகிறது.

டெல்லியில் உள்ள நேஷனல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட்ஸ் மையத்தில் ஜனவரி 27, 28 ஆகிய நாட்களில் நேரடியாக இந்த பொருட்கள் ஏலம் விடப்படும் என்றும் ஜனவரி 29 முதல் 30-ம் தேதி வரை மின்னணு முறையில் இ-ஏலம் விடப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் ஏலம் எடுக்க விரும்புபவர்கள் pmmementos.gov.in என்ற இணையதளத்தில் முழு விபரங்களை காணலாம். நேரடியான ஏலம் முறையில் இரண்டு நாட்களில் 270 பொருட்கள் விற்பனை ஆகியுள்ளது.

ஏலத்தில் பிரதமர் மோடி ரெயில் நிலையத்தில் நிற்கும் ஓவியமும், மரத்தாலான பைக்கும் அதிக விலைக்கு ஏலம் போனது. ஓவியத்திற்கு ரூ. 50 ஆயிரம் என்றும் பைக்கிற்கு ரூ. 40 ஆயிரம் எனவும் அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இறுதியில் இரண்டும் அதிகப்பட்சமாக ரூ. 5 லட்சத்திற்கு விற்பனையாகியது. இ-ஏலம் முறையில் ஏலம் தொடர்ந்து விடப்பட்டு வருகிறது.- Source: dailythanthi


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.