2000 கிலோ அரிசி… 200 ஆடுகள் பிரியாணிக்கு ரெடியா இருக்கு… எங்கே தெரியுமா?


மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகாவில் உள்ள கிராமம்தான் வடக்கம்பட்டி. இந்த கிராமத்தில் உள்ள முனிஸ்வரன் கோயிலில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி திருவிழா நடக்கும்.

அப்போது காலையில் பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக வருவார்கள். பிறகு முனியப்பசாமிக்கு பாலை ஊற்றி அபிஷேகம் செய்வர். அதன்பின்னர் நேர்த்திக் கடனாக ஆடு, கோழிகளை ஊர்வலமாக கொண்டு வந்து கோயிலுக்குள் விடுவார்கள். அந்த ஆடு, கோழிகள் எல்லாம் இரவு நேரத்தில் வெட்டப்பட்டு பிரியாணி தயார் ஆகும்.

இந்தக் கோயிலில் மட்டும்தான் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மட்டுமின்றி, திருவிழா அன்று சாலையில் செல்லும் அனைவருக்கும் மட்டன் பிரியாணி பிரசாதமாக தரப்படும். இந்த திருவிழா 3 நாட்கள் நடக்கும்.

எப்போதும் 2 ஆயிரம் கிலோ அரிசி போட்டு, 200 ஆடுகளை வெட்டி பிரியாணி தயார் ஆகும். இந்த பிரியாணி இரவு பகலாக சமைப்பார்கள். விடிகாலை 4 மணிக்கு மணக்க மணக்க முனீஸ்வரனுக்கு பிரியாணியை படைத்துவிட்டு, அதன்பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக தருவார்கள்.

காலை நேரத்தில் பிரியாணியை பெரும்பாலும் மக்களுக்கு சாப்பிட்டு பழக்கமில்லை என்றாலும், பிரசாதம் என்பதால் யார் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும், சாப்பிடுவார்கள். பலர் வீட்டிலிருந்து பாத்திரங்களை எடுத்து வந்து பிரியாணியை வாங்கி செல்வார்கள். அதன்படி வருகிற 25-ம் தேதி திருவிழாவுக்காக 2000 கிலோ அரிசியில் 200 ஆடுகளை வெட்டி போட்டு பிரியாணி செய்ய போகிறார்கள்.

இந்த கோயிலில் பிரியாணியை பிரசாதமாக வழங்க காரணம், முனியாண்டி ஸ்வாமியே ஒரு பிரியர்தானாம். இந்த கிராமத்து முனியாண்டிதான் “மதுரை முனியாண்டி விலாஸ்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டிகளில் பிரபலமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!