கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் – அதிகாலையில் நடந்த திடீர் யாகம்..!


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வெளிமாவட்டங்களுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் ஓ.பி.எஸ் தலைமையில் தலைமை செயலகத்தில் மந்திரங்கள் முழங்க யாகம் அரங்கேறியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பும், கூட்டணி ஆலோசனைகளும் தமிழக அரசியலில் முழூவீச்சில் நடந்துகொண்டிருக்கின்றன. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி கொல்கத்தாவில் நடைபெற்ற பா.ஜ.கவுக்கு எதிரான பேரணியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். வருகின்ற 27-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். இந்த வருகை நாடாளுமன்ற தேர்தலுக்கு அச்சாரமாக அமையும் என பா.ஜ.கவினர் கூறி வருகின்றனர். இப்படியான பரபரப்புக்கு இடையே கோட்டையில் சப்தமில்லாமல் யாகம் ஒன்று நடந்துமுடிந்துள்ளது. ஓ.பன்னீர் செல்வம் நடத்தியுள்ள இந்த யாகம் பெரும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.

யாகத்துக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் நேற்று இரவே தலைமைச் செயலகத்துக்கு வந்துள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாரிகள், ஊழியர்கள் யாரும் தலைமை செயலகத்தில் இருக்க வாய்ப்பில்லை என்று கூறி இன்று திட்டமிட்டு யாகம் நடத்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தின் நான்காவது நுழைவாயிலுக்குள் நுழைந்தால் கீழ்தளத்தில் எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் அறை. அதற்கு மேல்தளத்தில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, அதையடுத்து அமைச்சர் காமராஜ் சேம்பருக்கு அடுத்தாக இருக்கிறது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் அறை.

இந்த அறையானது அண்மையில் விரிவுபடுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. அறையில் காலை அதிகாலை 3 மணி அளவிலே யாகம் தொடங்கிவிட்டதாக கூறுகின்றனர். தொடர்ந்து 7 மணிக்கு ஓ.பி.எஸ் அறைக்கு வர, சுமார் 8 மணி வரை பூஜைகள் நீடித்தன. விடுமுறைநாள் மற்றும் அதிகாலை என்பதால் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மட்டுமே அங்கேயிருந்துள்ளனர். புதிய அறை என்பதால் யாகம் நடத்தப்பட்டதாகச் சிலர் தெரிவித்தனர். ஆனால் கடந்தாண்டே அறை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஓ.பி.எஸ் தரப்பில், “ஜெயலலிதாவுக்கு ஆன்மிகம் ஜோசியத்தில் உள்ளது போலவே, அவற்றில் ஈடுபாடு கொண்டவர் துணை முதல்வர்.அதனடிப்படையில் தான், தனக்கெதிராக தி.மு.க தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள 11 எம்.எல். ஏக்கள் வழக்கின் தீர்ப்பு குறித்து ஆஸ்தான ஜோதிடர்கள் சிலரிடம் கேட்டுள்ளார். பதவியின் ஸ்திரத்தன்மையை வலுப்பெறச் செய்யும் வகையில் யாகங்களை நடத்தவேண்டும் என்று ஜோசியர்கள் கூறியுள்ளனர்.

மேலும் யாகத்தை சம்பந்தபட்ட அலுவலகத்தில்தான் நடத்தியாகவேண்டும் என்றும் உறுதியாகத் தெரிவித்துள்ளனர். அதன்படி ஞாயிற்றுக்கிழமையான இன்று யாரும் இல்லாத காரணத்தால் யாகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது’ என்கின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மற்ற மாவட்டங்களுக்கு சென்றுள்ள நிலையில் இந்த யாகம் அரங்கேறியுள்ளது.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!