ஜெர்மனியில் பரபரப்பு – 14 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை மந்திரியை கொன்ற விடுதலைப்புலி கைது.!


இலங்கை முன்னாள் வெளியுறவு மந்திரி லட்சுமணன் கதிர்காமர் கடந்த 2005-ம் ஆண்டு கொல்லப்பட்டார். இதில் தொடர்புடைய விடுதலைப் புலி 14 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை முன்னாள் வெளியுறவு மந்திரி லட்சுமணன் கதிர்காமர் (73). இவர் கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ந்தேதி கொழும்பில் உள்ள தனது பங்களாவில் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார். இக்கொலைக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் பொறுப்பு ஏற்றது.

இதற்கிடையே 2009-ம் ஆண்டு நடந்த இறுதி கட்ட போரில் விடுதலைப்புலிகள் இயக்கம் தோல்வி அடைந்தது. அதையடுத்து விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு நாடுகளில் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் ஜெர்மனியில் விடுதலைப்புலிகள் உளவுப் பிரிவைச் சேர்ந்த நவனீதன் (39) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் இலங்கை முன்னாள் மந்திரி லட்சுமண் கதிர்காமர் கொலை வழக்கில் தொடர்புடையவர் என ஜெர்மனி போலீசார் தெரிவித்துள்ளனர்.

லட்சுமண் கதிர்காமர் கொல்லப்பட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலைப்புலி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெர்மனியின் தனியுரிமை சட்டப்படி கைதான விடுதலைப்புலியின் உண்மையான பெயர் வெளியிடப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இவரை அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை கொல்ல முயன்றதாகவும் இவர் மீது மேலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!