தஞ்சையில் 20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு டீ விற்கும் முதியவர்..!


தஞ்சையில் 20 ஆண்டுகளாக திருவள்ளுவர் தினத்தன்று ஒரு ரூபாய்க்கு டீ விற்று வருகிறார் முதியவர் ஒருவர்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் தங்கவேலனார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். திருக்குறள் மீது அதீத ஆர்வம் கொண்ட இவர், தனது கடையின் வெளியே இருக்கும் பலகையில் தினம்தோறும் ஒரு திருக்குறளையும் அதற்கான விளக்கத்தையும் எழுதி வைப்பார்.

டீ குடிக்க வருபவர்கள் அந்த திருக்குறளை படித்து செல்வர். சிலர் திருக்குறளை படிப்பதற்காகவே இவரின் கடைக்கு வருவதுண்டு. அப்படி ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தினத்தன்று தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு 1 ரூபாய்க்கு டீ விற்பனை செய்து வருகிறார்.

அதன்படி திருவள்ளுவர் தினமான நேற்றும் தனது கடைக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு 1 ரூபாய்க்கு டீ விற்றார். அத்தோடு வாடிக்கையாளர்களுக்கு திருக்குறளையும் அதன் மேன்மைகளைப் பற்றியும் எடுத்துரைத்தார். இந்த பெரியவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இப்படி ஒரு பக்கம் நம் முதியோர்கள் தமிழை பாதுகாக்க போராடிக் கொண்டிருக்கும் வேளையில், சில பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் பிள்ளைகள் தமிழில் பேசுவதையே தடை செய்து வைத்திருக்கும் கொடுமையை எங்கே சென்று சொல்வது.-Source: webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!