என்னால முடியலைங்க.. சாக போறேன்.. விஷம் குடித்த மாரீஸ்வரி – வீடியோவால் பரபரப்பு..!


“வட்டி மேல வட்டி கேட்டுட்டே இருக்காங்க.. அதனாலதான் தற்கொலை செய்ய போறேன்” என்று கந்துவட்டிக்காரர்கள் மீது புகாரை சொல்லி விஷத்தை குடித்த பெண்ணின் வாட்ஸ்அப் வீடியோ வைரலாகி வருகிறது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள பகுதி லாடனேந்தல். இங்கு வசித்து வருபவர் மாரீஸ்வரி. இவருக்கு 44 வயதாகிறது.

இவரது கணவன் செந்தில்குமார், மதுரை பசுமலை வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்க்கிறார். இவர் வீடு கட்டுவதற்காக பன்னீர்செல்வம், கீதா, பானுமதி, சதீஷ்குமார் ஆகியோரிடம் மொத்தமாக ரூ.1 லட்சம் வாங்கி இருக்கிறார்.

இந்த ஒரு லட்சம் ரூபாய்க்கு வட்டி மேல வட்டி கட்டிக் கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் அசலும் கட்டிவிட்டார். மொத்தமாக கணக்கு பார்த்தால், ஒரு லட்சத்துக்கு அசலும் வட்டியுமாக சேர்த்து ரூ.6 லட்சம் அவர்களுக்கு திருப்பி கொடுத்திருக்கிறார் மாரீஸ்வரி. ஆனால் கொஞ்ச நாளாக நிலைமை என்னவென்றால், அசலையும் கட்டிவிட்ட நிலையில் இன்னும் 4 லட்சம் ரூபாய் பாக்கி உள்ளது என்று கந்துவட்டிகாரர்கள் சொல்கிறார்களாம்.

அதுவும் இல்லாமல் இந்த 4 லட்சத்தை எப்போது தரப்போகிறாய் என்று கேட்டு தொந்தரவு செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். அது மட்டும் அல்லாமல், கந்துவட்டிக்காரர்கள் தன்னை டார்ச்சர் செய்வதாக திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் மாரீஸ்வரி புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த புகாரை போலீசாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

கந்துவட்டிக்காரர்களோ, மாரீஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். அதோடு “பணத்தைக் தராவிட்டால், உன் புருஷனை கொன்னுடுவோம், வாங்கின பணத்தை தரலைன்னா, விஷம் குடிச்சு செத்து போக வேண்டியதுதானே” என்றும் கடுமையாக பேசியிருக்கிறார்கள்.

இந்தநிலையில்தான் மாரீஸ்வரி வாட்ஸ் அப்பில் நிலைமையை விளக்கி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் அழுதுகொண்டே பேசியுள்ளார். “அசல் பணம் எல்லாத்தையும் கட்டிட்டேன். ஆனா இன்னும் ரூ.4 லட்சம் கேட்டு கந்துவட்டிக்காரங்க தொந்தரவு செய்றாங்க. எனக்கு உயிரை விடுவதைத் தவிர வேறுவழியில்லை” என்று பேசி விஷத்தையும் குடித்துவிட்டார்.

உடனடியாக மாரீஸ்வரி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது சம்பந்தமான விசாரணை இப்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனினும் மாரீஸ்வரி அழுதுகொண்டே பேசிய இந்த வீடியோ வைரலாகி வருகிறது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!