உனக்கு இந்தி தெரியாதா.. தமிழ்நாட்டுக்குப் போ – இளைஞரை மிரட்டிய அதிகாரிக்கு நேர்ந்த கதி..!


இந்தி தெரியாததால் தமிழ்நாட்டு இளைஞர் ஒருவரை மும்பை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரி அவமானப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஆபிரஹாம் சாமுவேல் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா செல்ல மும்பை சத்ரபதி விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார். அப்போது நடந்த இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக ட்வீட் செய்தார். “தமிழும் ஆங்கிலமும் மட்டும்தான் எனக்குத் தெரிந்திருந்தது.

அதனால், மும்பை சத்ரபதி விமானநிலையத்தில், `உனக்கு இந்தி தெரியாதா அப்படியென்றால் தமிழ்நாட்டுக்குப் போ’ என்று குடியுரிமை அதிகாரி ஒருவர் அவமானப்படுத்தினார். அங்கேயிருந்த 3 அதிகாரிகளில் ஒருவர் மட்டும் அப்படி நடந்துகொண்டார். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு எனக்கு விமானம். இல்லையென்றால் இந்தியாவிலிருந்து புகார் அளித்திருப்பேன்” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும், தன் பதிவை பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் போலீஸ் அதிகாரிகளையும் டேக் செய்திருந்தார். இதையடுத்து ட்விட்டரில் பெரும் விவாதம் ஏற்பட்டது. ஆபிரஹாமின் பதிவு 1512 முறை ரீட்வீட் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆபிரஹாம் சாமுவேலை அவமானப்படுத்திய அதிகாரி பணியிலிருந்து அகற்றப்பட்டார். அடுத்த 4 நிமிடத்தில் அவருக்குக் குடியுரிமை சான்று வழங்கப்பட்டது.

ஆபிரஹாம் சாமுவேல் அமெரிக்காவில் உள்ள க்ளாக்ஸ்டன் பல்கலையில் வேதியியல் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றவர். ஆபிரஹாம் சாமுவேல் இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து பல ட்வீட்களை வெளியிட்டார். ஒரு ட்வீட்டில், `இந்தி தெரியவில்லை என்பதற்காக மட்டும் அந்த அதிகாரி என்னை அவமதிக்கவில்லை. மேலும், தமிழ்க் குடியுரிமை கவுன்டரைக் கண்டுபிடித்துச் செல்லும்படியும் கூறினார் என்று கூறியிருந்தார்.

`இந்தியனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். தமிழனாக இருப்பதில் இன்னும் பெருமைப்படுகிறேன். அதில், உங்களுக்கு ஏதும் பிரச்னை இருந்தால் நீங்கள் இந்தியர்களே அல்ல’ என்று மற்றொரு ட்வீட்டில் சாமுவேல் குறிப்பிட்டிருந்தார். அந்தக் குடியுரிமை அதிகாரிக்கு நன்றாக ஆங்கிலம் தெரிந்திருந்தது. என் கண் முன்பே வெளிநாட்டு பிரஜையிடம் நன்றாக ஆங்கிலத்தில் பேசியதைக் கண்டேன் என்று தன் தொடர் ட்வீட்களில் குறிப்பிட்டிருந்தார்.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!