காட்பாடியில் பரபரப்பு – விஸ்வாசம் பார்க்க பணம் தராத அப்பா.. பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மகன்.!


விஸ்வாசம் படம் பார்க்க காசு தராத அப்பாவை பெட்ரோல் ஊற்றி மகன் கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று பேட்ட மற்றும் விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது.

இதனால் நடிகர் அஜித்குமார் தரப்பு ரசிகர்கள் அனைத்து திரையரங்குகள் முன்பும் பட்டாசுகளை வெடித்து, ஆட்டம் பாட்டம் என கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தின் சிறப்பு காட்சிகளை காண நள்ளிரவு முதலே ரசிகர்கள் தியேட்டர்கள் முன் கூடிவிட்டனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்ட கட்டப்பாடி அருகே கிழஞ்சூரில் ஒரு தியேட்டரில் விஸ்வாசம் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்க்க பாண்டியன் என்பவரின் மகன் ஆசைப்பட்டிருக்கிறார். இவர் தீவிர அஜித்குமார் ரசிகர். இவரது பெயரே அஜித்குமார்தான். முதல் நாள், முதல் ஷோ பார்க்கும் பல ரசிகர்களில் இவரும் ஒருவர்.

அதனால் விஸ்வாசம் படம் பார்க்க தன் அப்பாவிடம் பணம் கேட்டிருக்கிறார். ஆனால் அவர் பணம் தரவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமுற்ற அஜித்குமார், தூங்கிக்கொண்டு இருந்த தந்தை மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தி விட்டார்.

உடம்பெங்கும் தீ பற்றி எரிய பாண்டியன் அலறி துடித்துள்ளார். பிறகு சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் தீக்காயங்களுடன் பாண்டியனை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.

இது சம்பந்தமாக போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா பார்க்க பணம் தராத அப்பாவை மகனே பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!