காதலர் தினத்தில் திருமணம்… விஷம் குடித்த போலீஸ் காதலர்கள்.. காதலன் பரிதாபமாக மரணம்..!


காதலர் தினத்தன்று திருமணம் நிச்சயிக்கப்பட்ட போலீஸ் காதலர்கள் விஷம் குடித்தனர். இதில் காதலன் பரிதாபமாக இறந்தார். காதலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த துவாக்குடி வடக்கு மலையை சேர்ந்தவர் ஜெயதேவன். 30 வயதாகிறது. இவர் நவல்பட்டு அருகே அண்ணாநகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் போலீசாக பணியாற்றி வந்தார். இதேபோல் திருவெறும்பூர் ஸ்டேஷனில் பெண் போலீசாக வேலை பார்ப்பவர் செண்பகம். இவருக்கு வயது 27 ஆகிறது.

இவர்கள் இருவரும் 2 வருடங்களுக்கு ராமேசுரத்துக்கு பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்தனர். அங்கு ஒருவரையொருவர் சந்தித்து கொண்டனர். பிறகு இது காதலாக மாறியது. இந்த விவகாரம் வீட்டுக்கு தெரியவந்ததை அடுத்து, இருவருக்கும் கல்யாணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வருகிற பிப்ரவரி 14-ந் தேதி அதாவது காதலர் தினத்தன்று கல்யாணம் முடிவு செய்யப்பட்டு நிச்சயமும் நடந்தது.

ஆனால், ஜெயதேவன் வயிற்றுப்புண் மற்றும் குடல்வால்வு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 28-ந்தேதிகூட அவருக்கு அளவுக்கு அதிகமான வயிற்று வலி ஏற்பட்டது. வேலையில் கூட கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் லீவு போட்டுவிட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்தார்.

அப்போதும் வயிற்று வலி அவருக்கு குறையவே இல்லை. பொறுக்க முடியாத வயிறு வலி காரணமாக, திடீரென்று எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்து காப்பாற்றினர். சிகிச்சையின்போது திடீரென வலிப்பும் ஜெயதேவனுக்கு வந்துவிட்டது. எனவே இதையெல்லாம் காதலி செண்பகத்தினால் தாங்கவே முடியவில்லை.

காதலன் இறந்துவிடுவார் என்ற பயம் அதிகரித்து கொண்டே போனது. அதனால் தானும் இறந்துவிடலாம் என்று முடிவு செய்தார். அதற்காக முதல்முதலாக ஜெயதேவனை சந்தித்த ராமேசுவரத்துக்கு கடந்த 4-ம் தேதி தனியாளாக கிளம்பி போனார். எந்த இடத்தில் முதல் சந்திப்பு நடந்ததோ அங்கு அந்த இடத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

எனினும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து அவரது வீட்டுக்கும் தகவல் சொன்னார்கள். விரைந்து வந்த உறவினர்கள் செண்பகத்தை அங்கிருந்து கொண்டு வந்து திருச்சி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இப்போது அவருக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயதேவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து துவாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் காதலர்கள் விஷம் குடித்து இப்படி விபரீதத்தை தேடி கொண்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!