நாய்ப் பிரச்சினையால்.. உரிமையாளரே நாயாக மாறிக் கடித்த அதிர்ச்சி சம்பவம்..!


நாய் மீது பெப்பர் ஸ்பிரே அடித்த பெண்ணை, கோபத்தில் நாயின் உரிமையாளர் கடித்த சம்பவம் கலிபோர்னியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பூங்கா ஒன்றில் சம்பவத்தன்று இளம்பெண் ஒருவர் ஜாக்கிங் சென்றுள்ளார். அப்போது மற்றொரு பெண் அழைத்து வந்த நாய் ஒன்று அப்பெண்ணை கடிக்க முயற்சித்துள்ளது.

இதனால் நாயிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அப்பெண், நாய் மீது பெப்பர் ஸ்பிரே அடித்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நாயின் உரிமையாளரான பெண், மறுநாள் வழக்கம்போல் ஜாக்கிங் வந்த பெப்பர் ஸ்பிரே அடித்த பெண்ணை தாக்கியுள்ளார். அதோடு கோபத்தில் அவரை கடிக்கவும் செய்துள்ளார்.

வலியில் கதறிய அப்பெண், இந்த சம்பவம் குறித்து போலீசிடம் புகார் அளித்துள்ளார். கூடவே அந்த நாயையும், அதன் உரிமையாளரையும் செல்போனில் தான் எடுத்த வீடியோவையும் அவர் அளித்துள்ளார்.

இது தொடர்பாக தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர் அமெரிக்கப் போலீசார். அந்த வீடியோவில் இருக்கும் பெண்ணைப் பற்றி துப்புக் கொடுக்கும்படி அதில் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட பெண்ணை போலீசார் கைது செய்து விட்டனரா, இல்லையா என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. ஆனால், நாய்ப் பிரச்சினையால் அதன் உரிமையாளரே நாயாக மாறிக் கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!