நியாயம் கேட்டுச்சென்ற தம்பதியினரை நிரந்தரமாகப் பிரித்த பிரபல நிகழ்ச்சி…!


சொல்வதெல்லாம் உண்மை என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் ஒருவர், நடுத்தெருவில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். காதல் கணவனை தன்னிடம் இருந்து பிரித்து விட்டதாக கூறி மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சொல்வதெல்லாம் உண்மை என்ற பெயரில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் லட்சுமி ராம கிருஷ்ணன் என்பவர், நீதிபதி போல அமர்ந்து கொண்டு கட்டபஞ்சாயத்து செய்துவருவதாகவும், பாதிக்கப்பட்ட பெண்களை தீர்வு கிடைக்கும் என்று ஏமாற்றி அழைத்துச்சென்று அவர்களின் அந்தரங்க விவகாரங்களை நிகழ்ச்சியில் பேசவைத்து வீடியோவாக பதிவு செய்து ஒளிபரப்பி மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காரமடையை சேர்ந்த கற்பகனாயகம் என்ற பெண், சொல்வதெல்லாம் உண்மை குழுவை தொடர்பு கொண்டு, தனது காதலன் சிவா என்பவருடன் தனியாக வீடு எடுத்து 8 வருடமாக ஒன்றாக குடித்தனம் நடத்திவருவதாகவும், தற்போது காதலன் சிவா, வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் அவரை தன்னிடம் நிரந்தரமாக சேர்த்து வைக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.


தங்களிடம் வழக்கறிஞர்கள் இருப்பதாகவும் அவர்கள் மூலம் நியாயம் பெற்று தருவதாகவும் கூறி சொல்வதெல்லாம் உண்மை குழுவினர் அந்த பெண்ணை சென்னைக்கு வரவழைத்துள்ளனர். அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நம்பி தனது காதலனுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் அந்த பெண்.

அந்த பெண் தனது காதலன் சிவா உடன் ஒன்றாக வாழ்ந்தது குறித்த அந்தரங்க விவகாரங்களை எல்லாம் நிகழ்ச்சியில் எடுத்து சொல்ல அதனை லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்வதெல்லாம் குழுவினர் கேமராவில் படமாக்கி உள்ளனர். காதலனின் புதிய மனைவியிடமும் செல்போனில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இறுதியில் தீர்வு ஏதும் சொல்லாமல் பேருந்து கட்டணமாக 900 ரூபாய் மட்டும் கொடுத்து அந்த பெண்ணை ஊருக்கு அனுப்பி வைத்து விட்டதாக கூறப்படுகிறது.


அந்த நிகழ்ச்சி டிவியில் வந்தால் தொடர்ந்து சேர்ந்துவாழ மாட்டேன் என்று காதலன் சிவா கூறியதாகவும், அந்த பெண்ணின் கோரிக்கையை மீறி கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி அன்று நிகழ்ச்சி ஒளிபரப்பியதால் 8 வருடமாக தன்னுடன் ஒன்றாக வசித்து வந்த காதல் கணவர் சிவா நிரந்தரமாக பிரிந்து சென்று விட்டதாக குற்றஞ்சாட்டுகிறார் அந்த பெண்.

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு செல்லும்வரை காதலனுடன் ஒன்றாக வீட்டில் வசித்த அந்த பெண், தற்போது வீடுவாசல், ஆதரவின்றி நடுத்தெருவில் தவிப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் , மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை ஒளிபரப்பும் அந்த தொலைக்காட்சி, கட்டபஞ்சாயத்து செய்து தன்னை ஏமாற்றிய லட்சுமி ராம கிருஷ்ணன் ஆகியோர் மீது 420 மற்றும் 494 ,500 ஆகிய சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனுதாக்கல் செய்துள்ளார்.

ரகசியமாக பேசி தீர்க்கப்பட வேண்டிய குடும்ப பிரச்சனைகளை, அப்பாவி பெண்களின் அறியாமையை பயன்படுத்தி, அவர்கள் வாயாலேயே பேசவைத்து. பகிரங்கப்படுத்தி குடும்ப உறவுகளிடையே பிரிவினையை தூண்டும் இத்தகைய விபரீத நிகழ்ச்சிகளுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த குரலாக உள்ளது. – Source: polimernews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!