காதலுக்காக என்ஜினீயரிங் மாணவரை நண்பர்களே தீர்த்து கட்டியது அம்பலம்..!


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆவணியாபுரத்தை சேர்ந்தவர் சாகுல்அமீது. இவருடைய மகன் மும்தசர் (வயது 20). இவர் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு மெக்கானிக்கல் படித்து வந்தார். கடந்த 4-ந் தேதி திருமங்கலக்குடியில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்ற அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் மும்தசரின் செல்போனில் இருந்து தாய் மும்தாஜ்பேகத்துக்கு ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசிய மர்ம நபர்கள், ‘மும்தசரை கடத்தி உள்ளோம். ரூ.5 லட்சம் கொடுத்தால் விடுவிப்போம்‘ என மிரட்டினர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மும்தசரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திருபுவனம் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒரு வாய்க்காலில் மும்தசர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.

தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், மும்தசரின் நண்பர்களான திருபுவனம் மருத்துவர் தெருவை சேர்ந்த இஜாஸ்அகமது (20), பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஜலாலுதீன் (18) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவன் உள்பட 3 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதில் இஜாஸ்அகமது, ஐ.டி.ஐ. மாணவர் ஆவார். ஜலாலுதீனும், 17 வயது சிறுவனும் ஆட்டோ டிரைவர்கள். மூவரிடமும் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது மும்தசரை, அவருடைய நண்பர்களே கொலை செய்தனர் என்ற திடுக்கிடும் தகவல் அம்பலமானது. இதுபற்றி போலீசார் கூறியதாவது:-

மும்தசரும், இஜாஸ்அகமதுவும் பள்ளியில் படிக்கும்போதே நண்பர்கள். மதுரையை சேர்ந்த ஒரு பெண்ணை இஜாஸ்அகமது காதலித்து வந்தார். அந்த பெண்ணிடம், சமூக வலைத்தளம் மூலமாக மும்தசர் பழகி உள்ளார். இது இஜாஸ்அகமதுவை ஆத்திரப்படுத்தியது. காதலி தனக்கு கிடைக்க மும்தசர் தடையாக இருப்பதாக அவர் கருதினார். மும்தசரை கொல்ல நண்பர்ளுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டி உள்ளார். அதன்படி நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழா என கூறி மும்தசரை, அவருடைய நண்பர்கள் திருபுவனத்துக்கு வர செய்தனர். அப்போது கேக் வெட்டப்போவதாக கூறி, மும்தசரின் கண்களில் ரிப்பன் கட்டி உள்ளனர்.

இதையடுத்து இறைச்சி கடையில் பயன்படுத்தப்படும் கத்தியால், மும்தசரின் கழுத்தை அறுத்து கொலை செய்து உள்ளனர். பின்னர் மும்தசரின் செல்போன் மூலம் அவருடைய தாயாரிடம் பேசி, பணம் கேட்டு கடத்தல் நாடகம் ஆடி உள்ளனர்.

மேலும் மும்தசரின் செல்போனையும், கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் திருபுவனம் அருகே வாய்க்காலில் போட்டுவிட்டு ஆட்டோவில் தப்பி உள்ளனர். அந்த ஆட்டோவை பறிமுதல் செய்து உள்ளோம். மும்தசரின் செல்போனும், ஸ்கூட்டரும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர்.

இதுபற்றி திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இஜாஸ்அகமது, அவருக்கு உடந்தையாக இருந்த ஜலாலுதீன் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

காதல் விவகாரத்தில் என்ஜினீயரிங் மாணவரை, நண்பர்களே சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!