கர்ப்பகாலத்தில் தோல் கருமையடைகிறதா..? பயப்படாமல் இத முதல்ல படிங்க..!


பெண்ணாணவள் கருத்தரிக்க ஆரம்பித்து விட்டால் அதன் பின்னர் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் வித்தியாசமானதாகவே இருக்கும். அந்த வகையில், தோலின் நிறம் மாறுவது பற்றி இப்போது பார்ப்போம்.

கருவுற்ற பெரும்பாலான பெண்களின் முகத்தில் கரும்படலம் போன்று தோன்றியிருக்கும். அத்துடன் சிலரின் முகம் கருமையடைந்தும் காணப்படும். தாய்மையினால் ஏற்படும் சோர்வு காரணமாக தங்கள் அழகை சரிவரப் பேணாத காரணத்தினாலேயே இவ்வாறு முகம் கருமையடைகின்றது என பலர் நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அது தவறு. தாய்மை காரணமாக உடம்பினுள் ஏற்படும் மாற்றங்களே இந்த தோல் கருமையாதலுக்கு காரணமாக அமைகின்றது.

எனினும், குழந்தை பிறந்த பின்பு இது வழமைக்கு திரும்பி விடும். முகத்தில் மாத்திரமின்றி உடம்பின் பல்வேறு பாகங்களிலும் இந்த கருமையடைதல் நிகழ்கின்றது.
அதைப் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம்.

01. முகத்தில் தோன்றும் கருமையை க்ளோஅஸ்மா என்று அழைப்பர். குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே இது மறைந்து விடும்.

02. முலைக் காம்புகள் கருமையாகக் காட்சியளிக்கும். அத்துடன் ஒருவிதமான வலியும் ஏற்படும். இந்த நிலைமை பெண் ஒருத்தி கர்ப்பமானது உறுதி செய்யப்படுவதற்கு முன்னதாகவே தோன்றிவிடும். இதனை கருவுற்றிருப்பதற்கான அறிகுறியாகக் கருதலாம்.

03. கருவுற்ற காலத்தில் பெண்ணுறுப்பை சுற்றியுள்ள பகுதி, கால்களின் மேற்பாகம் மற்றும் அக்குள் பகுதி என்பனவும் கருமையாக மாறும்.


04. பாதங்கள் மற்றும் கைகள் சிவப்பாகத் தோன்றும்.

05. முகத்தில் முன்பெல்லாம் தெளிவாக பார்க்க முடியாதவாறு காணப்பட்ட மச்சங்கள் மற்றும் மருக்கள் கர்ப்பகாலத்தில் தெளிவாக தோன்றும்.

06. கர்ப்பகாலத்தின் போது வயிற்றில் தோன்றும் கருமை நிறத்திலான ஒரு கோடு குழந்தை பிறந்து 3 அல்லது 4 மாதங்களின் பின்னர் மறைந்து விடும்.

07. பொதுவாக கருமையான தோலைக் கொண்டவர்களிடத்தில் இந்த மாற்றங்களை நன்கு அவதானிக்க முடியும்.

இந்த மாற்றங்களுக்கு எவ்வாறு முகங் கொடுப்பது?
01. வெளியே செல்லும் போது சன்ஸ் கிறீம் மற்றும் ஹட் அணிந்து செல்வது சிறந்தது.

02. வெளியில் இருந்து பாதுகாக்கும் வண்ணம் நீண்ட ஆடைகளை அணிவது சிறந்தது.

03. கருமையைப் போக்கும் பொருட்டு பலர் பல விதமான கிறீம்களை உபயோகிப்பர்.
சிலர் ஒரு சில எண்ணெய் வகைகளையும் உபயோகிப்பர். ஆனால் கருத்தரித்து 12 வாரங்கள் வரை இது போன்ற எண்ணெய் வகைகளை உபயோகிக்கக் கூடாது. வைத்தியரின் ஆலோசனையுடன் கிறீம்கள் மற்றும் எண்ணெய் வகைகளை உபயோகிப்பது சிறந்தது.

04. போலிக் அமிலக் குறைப்பாட்டாலும் இந்த தோல் கருமையடைதல் ஏற்படுகின்றது என சில வைத்தியர்கள் தெரிவிப்பர். போலிக் அமிலமானது கருவுற்ற காலத்தில் மிகவும் அத்தியாவசியமானதொன்றாகும். அதனால் கருவுற்றவுடன் வைத்தியர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை உட்கொள்வது சிறந்தது..- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!