தமிழகத்தில் ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம்..!


பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினால் சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழலுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதாகவும், சில வகை பிளாஸ்டிக்கால் புற்று நோய் ஏற்படுவதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

பிளாஸ்டிக் கவர்களில் சூடான டீ-காபி வழங்குவது, உணவு பொருட்களை பார்சல் வாங்கிச் செல்வது போன்றவையும் சுகாதாரத்துக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

மேலும் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை குப்பை மேடுகளிலும், தெருக்களிலும் ஆங்காங்கே வீசுவதால் அவை மழை நீர் கால்வாய்களிலும், சாக்கடை கால்வாய்களிலும் புகுந்து அடைப்பு ஏற்படுத்துகிறது. இதனால் மழை காலங்களில் வெள்ளம் வழிந்தோட வழியில்லாமல் தெருக்களில் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதே போல் பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணில் புதையும் போது அதில் மக்கும் தன்மை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டத்தையும் அதிகரிக்க விடாமல் தடை செய்கிறது. மொத்தத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்தது. இந்த குழுவினர் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் பேப்பர்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள் போன்றவற்றை தடை செய்யலாம் என்று ஆலோசனை வழங்கினர்.

அவற்றுக்குப் பதில் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் வாழை இலைகள், பாக்கு மட்டை தட்டுகள், தாமரை இலைகள் போன்றவற்றின் பயன்பாட்டினை ஊக்குவிக்கலாம் என்றும் சிபாரிசு செய்தனர்.

இதையடுத்து உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ந்தேதி அன்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் ஜனவரி 1-ந்தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி மக்காத பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்கள், தண்ணீர் கப்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சி குழல் (ஸ்டிரா), பிளாஸ்டிக் கைப்பைகள் (கேரி பேக்), பிளாஸ்டிக் கொடிகள் உள்பட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

இந்த வகை பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, சேமித்து வைக்கவோ, பயன்படுத்தவோ கூடாது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ் இவைகள் தமிழ்நாடு முழுவதும் தடை செய்யப்படுவதாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் தடையை தீவிரமாக அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்களும், வியாபாரிகளும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதில் துணிப்பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களைப் பயன்படுத்த பழகிக் கொள்ள ஏதுவாக அரசு 6 மாதம் கால அவகாசம் அளித்தது.


மேலும் பிளாஸ்டிக் தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளையும் சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து திட்டமிட்டபடி வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது.

பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவது குறித்து அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகளில் அதிகாரிகள் குழு அமைத்து கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.

பிளாஸ்டிக் தடையில் இருந்து பால், தயிர், எண்ணை பாக்கெட்டுகள், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் போன்ற பிளாஸ்டிக் கவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பேப்பர் கப்களில் தற்போது பிளாஸ்டிக் கலவை 6 சதவீதமாக உள்ளது. அதை 4 சதவீதமாக குறைத்து தயாரித்தால் பேப்பர் கப்களை அனுமதிக்கலாம் என்றும் அரசு அறிவித்து உள்ளது.

பிளாஸ்டிக் தடையை மீறினால் 5 ஆண்டு ஜெயில் அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கவும் தொடர்ந்து சட்டத்தை மீறினால் நாள் ஒன்றுக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் வகை செய்கிறது.

இந்த சட்டத்தை மாநில அரசு பின்பற்றுவதா? அல்லது முதல் தடவையாக எச்சரிக்கை விடுப்பது சிறிய தொகை அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுப்பதா? என்பது பற்றி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இதுபற்றி சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி செந்தில்நாதன் கூறியதாவது:-

பிளாஸ்டிக் தடை தொடர்பாக நாங்கள் தேவையான அளவு விழிப்புணர்வு பிரசாரம் செய்து இருக்கிறோம். மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை அரசு தடை செய்துள்ளது குறித்து விளக்கி கூறியுள்ளோம். மாணவர்கள், வியாபாரிகள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம்.

இதையும் மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் முதலில் அவற்றை பறிமுதல் செய்வோம், உபயோகப்படுத்துபவர்கள், விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கு அபராத தொகை எவ்வளவு என்பதை அரசு முடிவு செய்து அறிவிக்கும். அதை நாங்கள் செயல்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!