தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல் – பரபரப்பில் திரையுலகம்..!!


நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர்களில் ஒரு பகுதியினர் போர்க்கொடி தூக்க தொடங்கினார்கள். பொதுக்குழுவை கூட்டவில்லை, வைப்பு நிதியில் முறைகேடு உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கத்துக்கு நேற்று வந்து போராட்டம் நடத்தியதுடன், சங்க அலுவலகத்துக்கும் பூட்டு போட்டனர்.

இதற்கிடையே, தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்றதாக காலையில் கைது செய்யப்பட்ட நடிகர் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு கிண்டி வட்டாட்சியர் ராம்குமார் தலைமையிலான வருவாய் துறையினர் இன்று இரவு சீல் வைத்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இருதரப்பும் சமாதானம் ஆன பிறகே அலுவலகம் திறக்கப்படும். தயாரிப்பாளர் சங்கத்தில் நிலவும் உச்சக்கட்ட மோதலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றனர்.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!