மும்பை இ.எஸ்.ஐ மருத்துவமனை தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8-ஆக உயர்வு..!!


மும்பையின் அந்தேரி பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான ‘காம்கார்’ என்ற தொழிலாளர் நல மருத்துவமனை உள்ளது.

5 மாடி கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த மருத்துவமனையில் நேற்று மாலை 4 மணியளவில், மருத்துவமனையின் 4-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியதால், அதிகளவில் கரும்புகை வெளியேறி சிறிது நேரத்திலேயே மருத்துவமனை பகுதி முழுவதையும் புகை மண்டலம் சூழ்ந்தது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள், உள்நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரும் அலறி அடித்துக்கொண்டு வெளியேற முயன்றார்கள்.


புகையின் காரணமாக பலருக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. தகவல் அறிந்தது 12 தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் 4 மணிநேரம் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.

தீயணைக்கும் பணி ஒருபுறம் நடக்க, மறுபுறம் ராட்சத கிரேன் மூலம் மருத்துவமனைக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். இதில், 141 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!